பெங்களூரு துயர சம்பவம்: கர்நாடகா அரசுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி

8

பெங்களரு: பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க கர்நாடக அரசுக்கு அம்மாநில ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விதான் சவுதாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெங்களூரு அணி வீரர்கள், சின்னசாமி மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டனர். அப்போது, பெங்களூரு அணி வீரர்களை பார்ப்பதற்காக சின்னசாமி மைதானம் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இதனால், ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து கப்பன் பார்க் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பான வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதி காமேஷ்வர் ராவ் மற்றும் நீதிபதி சி.எம்.ஜோஷி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் கிரண் ஷெட்டி, பெங்களூரு சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தார். மேலும், போலீஸ் கமிஷனர் மற்றும் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறித்து விளக்கம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில், மைதானத்தில் 2.5 லட்சம் பேர் கூடினர். நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 6 பேர் ஆண்கள். 5 பேர் ஆண்கள். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்னும் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இன்று வீடு திரும்புவார்கள்.

நீதிபதிகள்:
எதிர்காலத்தில் இதுபோன்று நடந்தால், அதனை தடுக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் அரசிடம் உள்ளதா

கிரண் ஷெட்டி:
அது எதிர்காலத்தில் அரசின் திட்டத்தை பொறுத்தது.

நீதிபதிகள்:
இதுபோன்ற சம்பவங்களில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாகனங்கள் தயார் நிலையில் இருக்கிறதா? இதுவும் அவசர கால வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ளதா

கிரண் ஷெட்டி:
நீதிமன்றத்தின் அறிவுரையை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளும்

நீதிமன்றம்:
சம்பவம் நடந்த இடத்தில் ஆம்புலன்ஸ்கள் இருந்ததா

வழக்கறிஞர்:
ஆம்புலன்ஸ்கள் இருந்தன. ஆனால் போதுமான எண்ணிக்கையில் இல்லை.

கிரண் ஷெட்டி:
நுழைவுக் கட்டணம் இல்லை என்பதால், மைதானத்தின் முன்பு 2.5 லட்சம் பேர் கூடினர்

நீதிபதிகள்:

இறப்புகள் அனைத்தும் மைதானத்தில் மட்டும் ஏற்பட்டதா

கிரண் ஷெட்டி:
நுழைவு வாயிலில் மட்டுமே ஏற்பட்டது

நீதிபதிகள்:

கிரிக்கெட் போட்டி நடந்த போது என்ன மாதிரியான நடைமுறை இருந்தது

கிரண் ஷெட்டி:
நேற்றைய நிகழ்ச்சி ஏற்பாட்டை பெங்களூரு அணி நிர்வாகம் செய்தது. பாதுகாப்பையும் அவர்கள் தான் ஏற்றனர்

நீதிபதிகள்:
அணி நிர்வாகம், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு அனுமதி கேட்டனரா

கிரண் ஷெட்டி:
மைதானம் வெளியே பெரிய அளவில் கூட்டம் கூடியது. பெங்களூருவில் இருந்து மட்டும் அல்லாமல், மாநிலம் முழுவதும் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தனர். சம்பவம் குறித்து நீதி விசாரணை நடக்கிறது. 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதுடன் வழக்கும் பதிவாகி உள்ளது. யாரையும் தப்பிக்க விட மாட்டோம். இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்து உள்ளார். விசாரணை முழுதும் வீடியோ பதிவு செய்யப்படும். எதையும் மறைக்க மாட்டோம்.

நீதிபதிகள்

மைதானத்தில் எத்தனை நுழைவுவாயில்கள் உள்ளன

கிரண் ஷெட்டி

21 நுழைவு வாயில்கள் உள்ளன. அனைத்தையும் திறந்து வைத்து மக்களை அமர வைக்க அறிவுரை வழங்கினோம்.

மற்றொரு வழக்கறிஞர்:
கிரிக்கெட் வீரர்களை கவுரவிக்க வேண்டும் என முடிவு எடுத்தது யார் என விளக்க வேண்டும். வெளிநாட்டு வீரர்களை கவுரவிக்க வேண்டிய அவசியம் என்ன? மக்களுக்கு பாதுகாப்பு வழங்க என்னநடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.

நீதிபதிகள்:
இதனை நீதிமன்றம் விசாரணை செய்யும். இந்த துயர சம்பவத்திற்கான காரணத்தையும், எதிர்காலத்தில் எவ்வாறு தடுப்பது என்பதை கண்டறிய பலரிடம் இருந்து எங்களுக்கு கருத்துகள் வந்துள்ளன. அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்த அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம் எனக்கூறி விசாரணையை வரும் 10 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement