ஒற்றை கோரிக்கையில் ஒன்றிணைவோம்! பல்லடம் வட்டார விவசாயிகள் உறுதியேற்பு

பல்லடம்,; பல்லடம் பகுதிக்கு நீர் செறிவூட்டும் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து, விவசாயிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மூத்த விவசாயி சுப்பையன் பேசியதாவது:

இயற்கையாக, எளிமையாக கிடைக்கக்கூடிய தண்ணீரை வீணடித்துவிட்டு, ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீரை உறிஞ்சி பயன்படுத்தி வருகிறோம். அட்சயப் பாத்திரமாக இருந்த கிணறுகளை மூடிவிட்டு, ஆழ்துளை கிணறுகளை அதிகப்படுத்தி வருகிறோம்.

விவசாயம் செழிப்பாக இருந்தால்தான் அனைத்து தொழில்களும் நன்றாக நடக்கும். ஆனால், விவசாயிகளைப் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. விவசாயிகளுக்கு தண்ணீரை கொடுப்பதற்கு பதிலாக, இலவச மின்சாரம் கொடுப்பதால் செலவுகள்தான் அதிகரிக்கின்றன. வாய்க்கால்களை வெட்டி குளம் குட்டைகளுக்கு தண்ணீர் கொண்டு சென்றால், அரசுக்கு ஏராளமான மின்சாரம் மிச்சமாகும்.

தேவை உள்ளது



வேலுசாமி (திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர்):

பல்வேறு காரணங்களால் பல்லடத்தின் மேற்கு பகுதிக்கு கிடைக்க வேண்டிய பி.ஏ.பி., தண்ணீர் கடந்த காலத்தில் தடைபட்டது. 2014ல் பி.ஏ.பி., விரிவாக்கத்தை வலியுறுத்தி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், அமைப்பு முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது, தண்ணீரின் தேவை உள்ளதால், அனைவரும் ஒன்றுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் விவசாயத்தில் செழிப்பாக இருந்த பல்லடம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.

பாடுபட வேண்டும்



பழனிசாமி (கோடங்கிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர்):

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து ஆறுகள் நிரம்பி ஓடினாலும், பல்லடத்துக்கு மட்டும் பெயரளவுக்கு தான் மழை கிடைக்கிறது. வரட்சியான இப்பகுதியில் உள்ள, 13 ஊராட்சிகளுக்கு வரவேண் டிய பி.ஏ.பி., பாசன திட்டம் பல காரணங்களால் கிடைக்காமல் போனது.

பல்லடம் பகுதியில் நிலத்தடி நீரை செறிவூட்ட வேண்டி பல்வேறு முயற்சிகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டன. 12 ஆண்டுக்கு முன்பே இதனை வலியுறுத்தி தான் இயக்கம் துவங்கப்பட்டது.எனவே, கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் இதற்காக பாடுபட வேண்டியது அவசியம்.

நல்ல முயற்சி



கீர்த்தி சுப்பிரமணியம் (மாவட்ட அறங்காவலர் குழு முன்னாள் தலைவர்):

விவசாயிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து தொழில்களுக்கும் தண்ணீர் மிக அவசியம். தொழிலதிபர்கள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி தண்ணீரை பெற்றுக் கொள்கின்றனர். இல்லாத ஏழை எளிய மக்களுக்கு தான் மிகவும் சிரமம். ஒரு நல்ல செயலுக்காக சிலர் முயற்சி மேற்கொண்டால், அதனை பாராட்டாவிட்டாலும், இடையூறு ஏற்படுத்தக் கூடாது. அனைத்து இடையூறுகளை களைந்து, நம் முயற்சி வெற்றி பெற ஒன்றிணைய வேண்டும்.

காலத்தின் கட்டாயம்



ஆனந்த் (விவசாயி, பருவாய்):

குறுகிய பகுதிகளுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த பி.ஏ.பி., பாசன திட்ட விரிவாக்கத்துக்காக தேசிய, மாநில கட்சிகள் பாரபட்சமின்றி செயல்பட்டுள்ளன. இவ்வாறு, பல்வேறு முயற்சிகளுக்கு பின் கிடைத்த பி.ஏ.பி., தண்ணீர் இன்று மாற்று பயன்பாட்டுக்கு பரவலாக சென்றுவிட்டது.

கடந்த காலத்தில், பல்லடம் பகுதியில் பரவலாக காய்கறிகள் தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்ட பகுதியாகும். பல நுாறு கிலோ மீட்டர் பயணிக்கும் பி.ஏ.பி., பாசன நீர் நமது பகுதிக்கு ஏன் முழுமையாக கிடைக்கக் கூடாது? மாற்றுப் பயன்பாட்டுக்கு சென்ற பாசன நீரை நாம் பயன்படுத்தலாமே!

இது, சாத்தியமே



பழனிசாமி (தமிழக விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர்):

நகரமயமாதல், காற்றாலை உற்பத்தி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல காரணங்களால், பல ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் காலப்போக்கில் காணாமல் போயின. இவ்வாறு பி.ஏ.பி.,யில் பாசன வசதி பெற்று வந்த நிலங்களை அதிலிருந்து நீக்கி இருக்க வேண்டும்.

ஆனால், இதிலும் சிக்கல் இருப்பதால், உபரி நீரையும் நம்மால் பெற முடியாத சூழல் உள்ளது. கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, பி.ஏ.பி., விரிவாக்கம் என்பது சாத்தியமல்ல. இதற்கு மாற்றாக உபரி நீரை பெறுவது அல்லது குளம் குட்டைகளுக்கு நீரை கொண்டு சென்று நிலத்தடி நீரை செறிவூட்டுவது என்பது மட்டுமே சாத்தியம்.

நோக்கம் நிறைவேறும்



சக்திவேல் (விசைத்தறி உரிமையாளர் சங்க துணைத் தலைவர்):

அத்திக்கடவு- - அவிநாசி திட்டத்தை, 60 ஆண்டு போராடி பெற்றனர். அதுபோல், பல்லடத்துக்கு ஏதாவது ஒரு நீர் செறிவூட்டும் திட்டத்தை கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பல்லடம் பகுதி செழிப்படைய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இதில் ஒன்றிணைய வேண்டும்.

நமது நோக்கம் மற்றும் ஒற்றை கோரிக்கையானது தண்ணீர் வேண்டும் என்பது மட்டுமே. பாசன விவசாயிகள், அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசித்து, தேவையான திட்டத்தை கொண்டுவர அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

நிரந்தர திட்டம்



புண்ணியமூர்த்தி (வட்டார காங்., தலைவர்):

பி.ஏ.பி., பாசன விரிவாக்கத்தை வலியுறுத்தினால், ஏற்கனவே பாசன நீர் பெற்று வரும் விவசாயிகள் போராட வாய்ப்பு உள்ளது. எனவே, பல்லடத்தின் நிலத்தடிநீரை செறிவூட்ட எந்தத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதை சரியாக தீர்மானிக்க வேண்டும்.

இவ்வாறு, நிரந்தரமான ஒரு திட்டத்தை கொண்டு வந்து விட்டால், நமது காலத்துக்கு மட்டுமன்றி, அடுத்த தலைமுறையும் இதனால் பயன்பெறும். இதற்காக, தீவிரத் தன்மை கொண்டவர்கள் இதில் ஒன்றிணைய வேண்டும்.

நிலத்தடிநீர் செறிவூட்டும் திட்டத்தை கொண்டு வந்து விட்டால், நிச்சயமாக, ஒவ்வொரு ஊராட்சிக்கும் பல லட்சம் ரூபாய் மிச்சமாகும்.

அரசின் கவனத்துக்கு...



ராஜேந்திரன் (முன்னாள் மாவட்ட கவுன்சிலர்):

அத்திக்கடவு- - அவிநாசி திட்ட விரிவாக்கமா, நொய்யல் நீரை பயன்படுத்துவதா அல்லது பி.ஏ.பி., பாசன விரிவாக்கமா என, எந்தத் திட்டம் பல்லடத்துக்கு சாத்தியம் என்பதை ஆராய்ந்து, அதனை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

சரியான காலகட்டத்தில் தான் நாம் இதை முன்னெடுத்துள்ளோம். நம் வீட்டு விசேஷத்திற்கு எவ்வாறு அனைவரும் ஒன்று கூடுகிறோமோ, அதுபோல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் இதற்காக ஒன்றிணைய வேண்டும்.

Advertisement