தொன்மை வாய்ந்த கோவிலை தெருவில் விட்டது அரசு: பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு

18


திருச்சி: தொன்மை வாய்ந்த திருச்செந்துறை கோவிலை தெருவில் விட்டது அரசு என்று ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் குற்றம்சாட்டி உள்ளார்.


திருச்சியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: திருச்சி ஜீயபுரம் பகுதியில் உள்ள திருச்செந்துறை கோவில், எப்படிப்பட்ட கோவில் என்பது குறித்து திருச்சி மக்களுக்கு தெரியாத தகவல்கள் உள்ளது. இக்கோவிலை இன்று காலை 9 மணிக்கு திறந்தனர். நேற்று 7 20 மணிக்கு மூடி உள்ளனர். எந்நேரமும் எரிய வேண்டிய விளக்கு எரியவில்லை. காலை 9:15 மணிக்கு தான் முதல் விளக்கை ஏற்றினர்.


தமிழகத்தில் கோவில்களை ஆண் அரசர்கள் கட்டியதாக வரலாறு உள்ளது. ஆனால், இந்த கோவிலை கட்டியது பெண். இது குறித்து யாருக்கும் தெரியவில்லை. 75 ஆண்டுகள் முன்னோர்களின் வரலாறை நம் தாய்மொழியில் படிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம். நமக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. நீங்களும் படிக்கவில்லை. நானும் படிக்கவில்லை.


'யாண்டு, 3வது இவ்வாண்டு சோழப்பெருமானடிகள்' என்ற வார்த்தை கோவில் குறித்த தகவலில் உள்ளது.

சோழ மன்னன் ஆதித்ய தேவரின் மகன் பராந்தகன். இவரது பெயர் சோழப்பெருமானடிகள். இவரது மகன் அரிகுலகேசரியார். இவரது தேவியார்தான் கோவிலை கட்டி உள்ளார். இவரது மனைவி சோழநாட்டவர் அல்ல. தென்காசி, நெல்லை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம்.


முந்தய அரசுகள், பெரிய பாவச்செயலை செய்துள்ளனர். இங்கு இருக்கும், ஆட்சியாளர்களுக்கு இல்லாத பொறுப்பும், புத்தியும் இந்த அரசிக்கு உண்டு. ஒவ்வொரு கோவிலும் மங்கள வாத்தியம் நடக்கும். இது பெரிய கோவில் என்பதால் நடக்க வாய்ப்பு உள்ளது.
மங்கள வாத்தியம் இசைப்பவர்கள் வாழ வேண்டும் என்பவருக்காக, பல நூறு ஆண்டுகளுக்கு எந்நேரமும் மங்கள வாத்தியம் பாட வேண்டும் என்பதற்காக தங்கம் கொடுத்து உள்ளார். அதனை ஈசான மங்களம் மகாசபைக்கு கொடுத்தார். அதில் நிலத்தை வாங்கி, இந்த குடும்பத்திற்கு மங்கள வாத்தியம் இசைப்பவர்களுக்கு வழங்கி உள்ளனர். அவர்கள் கருவறைக்கு அருகே நின்று வாசிப்பார்கள்.


ஆனால், 20 ஆண்டுக்கு முன்பு சம்பளம் கொடுப்பதை நிறுத்திவிட்டு, அப்படிப்பட்ட நிகழ்ச்சி கோவிலில் இல்லாமல், தொன்மையான கோவிலை அறநிலையத்துறை தெருவில் விட்டுவிட்டது. இவ்வாறு பொன் மாணிக்கவேல் கூறினார்.

Advertisement