11 பேர் உயிரிழந்த விவகாரம்: பெங்களூரு அணி, கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது பாய்ந்தது வழக்கு

13

பெங்களூரு: கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பெங்களூரு அணி, கர்நாடக கிரிக்கெட் சங்கம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் 18 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக கோப்பையை வென்ற ஆர்.சி.பி., எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வரவேற்க சின்னசாமி மைதானம் முன் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் நெரிசலில் சிக்கி ஆறு பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கர்நாடக ஐகோர்ட், மாநில அரசுக்கு கிடுக்கிப்பிடியான கேள்வியை எழுப்பி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.


இந்நிலையில், பெங்களூரு அணி, கர்நாடக கிரிக்கெட் சங்கம் மற்றும் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்த டிஎன்ஏ பொழுதுபோக்கு நிறுவனம் மீது கர்நாடக போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிஎன்எஸ் சட்டப்பிரிவு 105 உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இந்த வழக்கை சிஐடி விசாரணைக்கு மாற்றுவது தொடர்பாக மாநில அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்த உள்ளது.

இந்நிலையில், 11 பேர் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசால் நியமிக்கப்பட்ட மாவட்ட நீதிபதி ஜெகதீசா கூறுகையில், கர்நாடக கிரிக்கெட் சங்கம், பெங்களூரு அணி நிர்வாகம், கர்நாடக மெட்ரோவுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர், கூட்டநெரிசல் ஏற்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

Advertisement