அமைச்சர் மனோ தங்கராஜூக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!

சென்னை: 'பொதுமக்கள் கூட்டமாகக் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று கூறும் அமைச்சர் மனோ தங்கராஜ், தனது கட்சித் தலைவரிடம் இப்படிச் சொல்வாரா' என்று தமிழக பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
அவரது அறிக்கை:
கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியால், கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, 'பொதுமக்கள் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது' என்று பதிலளித்திருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.
கோவில் சொத்துக்களையும், பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உண்டியல் பணத்தையும், சுரண்டிக் கொண்டிருக்கும் கூட்டம், இன்று பொதுமக்கள் கோவில் திருவிழாவுக்கு செல்வது நாகரிகம் இல்லை என்று கூறும் அளவுக்கு கொழுத்துப் போயிருக்கிறது.
எது நாகரிகம்? தமிழகத்தின் ஒட்டு மொத்த கனிம வளங்களையும் கடத்தி விற்பதா அல்லது ஆவின் பால் கொழுப்பைக் கூட விட்டு வைக்காமல் திருடுவதா?
இண்டி கூட்டணிக் கட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைக்க, பொதுமக்கள் கூட்டமாகக் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று கூறும் அமைச்சர் மனோ தங்கராஜ், கொத்தடிமைகளைக் கூட்டி கூட்டம் போடும் தனது கட்சித் தலைவரிடம் இப்படிச் சொல்வாரா?
தமிழகத்தில் கள்ளச் சாராயமும், கஞ்சாவும், போதைப் பொருள்களும் ஆறாக ஓடிக் கொண்டிருக்கின்றன. கொலை நடைபெறாத நாளே இல்லை என்ற அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. இந்த அழகில், பகுத்தறிவு பேசுகிறாராம். வெங்காயம்.
இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.











மேலும்
-
செஞ்சி வார சந்தையில் ஆடு விற்பனை மந்தம்
-
தறிகெட்டு ஓடிய சரக்கு வாகனம்; கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு மூவர் காயம்; சிறுவன் உட்பட மூன்று பேர் கைது
-
ஸ்பீக்கரில் பைக் மோதி தொழிலாளி பரிதாப பலி
-
பொது இடங்களில் சிலைகள் நிறுவ அனுமதிக்க கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு
-
'தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., நீடிக்கும்'
-
கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி