கூட்ட நெரிசலில் 11 பேர் பலி: பெங்களூரு போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட்: விசாரணை கமிஷன் அமைப்பு

11

பெங்களூரு: பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பெங்களூரு போலீஸ் கமிஷனர், கூடுதல் கமிஷனர், இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். மேலும்,ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது.


ஐ.பி.எல்., தொடரில் முதன்முறையாக கோப்பை வென்ற பெங்களூரு அணிக்கு நேற்று சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. அப்போது வீரர்களை பார்க்க 2 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் ஒன்று திரண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர். இது மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கர்நாடக ஐகோர்ட்டும் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.

இந்நிலையில், முதல்வர் சித்தராமையா கூறியதாவது: கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த விவகாரத்தில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா, கூடுதல் கமிஷனர், மைதான பொறுப்பாளர், மத்திய சரக துணை கமிஷனர், போலீஸ் நிலைய பொறுப்பாளர், கப்பன் பார்க் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.

மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


விசாரணை கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜான் மைக்கேல் டி.குன்ஹா, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement