கமலின் 'தக்லைப்' படத்தை காண ஓசூரில் குவிந்த கர்நாடக ரசிகர்கள்
ஓசூர்; கர்நாடகாவில், 'தக்லைப்' படம் வெளியாகாத நிலையில், ஓசூரில் படம் பார்க்க, கர்நாடக மாநில ரசிகர்கள் குவிந்தனர்.
'தமிழில் இருந்து கன்னடம் உருவானது' என, நடிகர் கமல் தெரிவித்த கருத்து, கர்நாடக மாநிலத்தில் பெரும் எதிர்ப்பலையை ஏற்படுத்தி உள்ளது. அதனால், உலகம் முழுவதும், தக்லைப் படம் இன்று வெளியானாலும், கர்நாடகா மாநிலத்தில் வெளியாகவில்லை. இதனால், அம்மாநில, கமல் ரசிகர்கள் மட்டுமின்றி, சிம்பு ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.
கர்நாடக மாநிலத்தை ஒட்டிய, தமிழக எல்லையான ஓசூர் பகுதிக்கு, கர்நாடகாவின் பெங்களூரு, ஆனைக்கல், அத்திப்பள்ளி, சர்ஜாபுரம், எலக்ட்ரானிக் சிட்டி, உட்பட, பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல ஆயிரம் ரசிகர்கள், தக்லைப் படம் பார்க்க திரண்டனர்.
லட்சுமி சினிமாஸ், கிரான்ட் சினிமா, மஞ்சுநாதா, ராகவேந்திரா, பாலாஜி, லட்சுமிதேவி தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. தமிழ் ரசிகர்களுக்கு இணையாக, கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்திருந்த ரசிகர்களும் இருந்தனர்.
கர்நாடகா மாநில ரசிகர்கள் கூறுகையில், 'எங்கள் மாநிலத்தில், மொத்தம், 100க்கும் மேற்பட்ட தியேட்டர்களில், தக்லைப் படம் வெளியாக இருந்தது. ஆனால், கமல் கருத்தை அரசியலாக்கி, படத்திற்கு தடை போட்டு விட்டனர். படத்திற்கு தடை போடலாம். ஆனால், ரசிகர்களுக்கு தடை போட முடியாது. பல கி.மீ., கடந்து, தமிழக எல்லைக்கு வந்து படம் பார்க்க வந்துள்ளோம்' என்றனர்.
