'போதைப்பொருட்கள் தடுக்க ரெய்டு அதிகரிக்க வேண்டும்'

1

திருப்பூர்; ''போதைப்பொருளை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் அதிகளவில் ரெய்டுகள் நடத்தப்பட வேண்டும்' என்று மதுவிலக்கு கூடுதல் டி.ஜி.பி., அமல்ராஜ் அறிவுறுத்தினார்.

கோவை சரகத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் போதை பொருள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அமல்ராஜ், கடந்த ஐந்து மாதங்களில் கோவை சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் போதை பொருள் ஒழிப்பு, தடுப்பு குறித்து வழக்கு விபரங்களை கேட்டறிந்தார்.

''போதைப்பொருட்களை ஒழிக்க அதிகப்படியான வழக்குபதிவு, கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதிகப்படியான ரெய்டுகள் நடத்தப்பட வேண்டும். ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்ட வழக்குகளில், விரைந்து கோர்ட் அனுமதி பெற்று, போதைப்பொருட்களை அழிக்க வேண்டும். போதைப்பொருள் விற்பனையாளர் மட்டுமல்லாமல், பின்னணியில் உள்ளவர்களையும் கண்டறிய வேண்டும்.

போலீஸ் தரப்பில் அனைத்து நடவடிக்கையும் தொய்வு இல்லாமல், விரைந்து இருக்க வேண்டும்'' என்று அறிவுறுத்தினார். திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், கோவை சரக டி.ஐ.ஜி., சசிமோகன் உள்பட கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement