பெண் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் எம்.டி.சி., மீது சி.ஐ.டி.யு., குற்றச்சாட்டு

சென்னை, மாநகர போக்குவரத்துக்கழகத்தில் 'பயோமெட்ரிக்' வாயிலாக தொழிலாளர்கள் வருகை, முறையாக பதிவு செய்யப்படவில்லை.

இதனால் 750க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு விடுப்பில் கழிக்கப்பட்டு, ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதை கண்டித்து சி.ஐ.டி.யு., சார்பில், பல்லவன் இல்லம் அருகில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, சி.ஐ.டி.யு.,சென்னை மாநகர போக்குவரத்து பொதுச்செயலர் தயானந்தம் அளித்த பேட்டி:

மாநகர போக்குவரத்து கழகத்தில் 750க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அதிகாரிகளுக்கு 20 நாட்கள் வரை வருகை பதிவு வழங்காமல், விடுப்பில் கழித்து சம்பளம் போடப்பட்டுள்ளது.

அலுவலக பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பயோமெட்ரிக் மட்டுமின்றி, வருகை பதிவை ஏடு வாயிலாகவும் பராமரிக்க வேண்டும்.

இதற்கிடையே, மாநகரபோக்குவரத்துக் கழக தலைமையகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர், தனக்கு தொந்தரவு இருப்பதாக புகாரளித்துள்ளார். பின், புகாரளித்த பெண் ஊழியரே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு வருகை பதிவு வழங்கப்படவில்லை. இவ்வாறு பெண் ஊழியர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். மற்றொரு பெண் ஊழியர், பணியை ராஜினாமா செய்துள்ளார்.

இங்குள்ள பெண்கள் மன அழுத்தத்தில் பணிபுரியும் சூழல் இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு தலையிட்டு, விசாரணை நடத்த மாநகரபோக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement