தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி கேரளாவில் இருந்து லாட்டரி கடத்தல் ரயில்வே போலீசார் கண்காணிப்பு தீவிரம்

ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் ரயில்களில் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதும், கேரளாவில் இருந்து மதுரை வரும் ரயில்களில் பயணிக்கும் சிலர் லாட்டரி சீட்டுகளை கடத்தி கொண்டு வருவதையும் கண்டறிந்த ரயில்வே போலீசார் தங்களது சோதனையை தீவிரபடுத்தி உள்ளனர்.

கடந்த சில வாரங்களாக மதுரையில் இருந்து விருதுநகர், தென்காசி, புனலுார், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் வழியாக குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் யாரும் உரிமை கோராத நிலையில், எளிதில் துாக்கிச் செல்லும் வகையில் பல அரிசி மூடைகள் கடத்திச் செல்லப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் ரயில்வே தனிப்படை போலீசார், பயணிகள் போல் பயணித்து ரேஷன் அரிசி மூடைகள் கடத்திச் செல்வதை கண்டறிந்து கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸ் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். மதுரையில் இருந்து புறப்படும் இந்த ரயிலில் எந்த ஊரில் இருந்து ரேஷன் அரிசி மூடைகள் ஏற்றிச் செல்லப்படுகிறது என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் இருந்தும், செங்கோட்டையில் இருந்தும் மதுரை வரும் ரயிலிலும் பல தனி நபர்கள் லாட்டரி சீட்டுகளை கடத்தி கொண்டு வந்து விற்பனை செய்வதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். இதனை எடுத்து சந்தேகத்துக்குரிய நபர்களை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் கண்காணித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா லாட்டரிகளை கொண்டு வந்த ராமலிங்கம் என்பவரை கைது செய்து, லாட்டரிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து மதுரையில் இருந்து கொல்லம், குருவாயூர், பாலக்காடு, புனலூர் செல்லும் ரயில்களில் ரேஷன் அரிசி மற்றும் லாட்டரி சீட்டுகள் கடத்தி செல்லப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பில் ரயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement