80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் கைது

கோலார்: பலாத்காரம் செய்து, மூதாட்டியை கொன்றுவிட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றவரை, கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்தது.

கோலார் மாவட்டம், சீனிவாசபுரா தாலுகாவின் முல்பாகல் சாலையின், சந்தை மைதானம் அருகில், கேரேஜ் ஓரத்தில் இம்மாதம் 2ம் தேதியன்று அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவரின் சடலம் கிடந்தது.

இதை கண்ட அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும் அங்கு வந்து, பார்வையிட்டு மூதாட்டியின் உடலை மீட்டனர். அவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலையானது, முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.

மூதாட்டி சீனிவாசபுரா தாலுகாவின் ஹெச்.ஜி.ஹோசூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமி தேவம்மா, 80, என்பது தெரிய வந்தது.

மே 29ம் தேதியன்று, சீனிவாசபுராவில் உள்ள தேவாலயத்துக்கு செல்வதாக, குடும்பத்தினரிடம் கூறிவிட்டு புறப்பட்டார்.

இரண்டு நாட்கள் சீனிவாசபுராவில் உறவினர்கள் வீட்டில் இருந்த மூதாட்டி, ஜூன் 2ம் தேதி, தன் ஊருக்கு செல்வதற்காக, பஸ்சுக்காக காத்திருந்தபோது, கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொலையாளியை போலீசார் அடையாளம் கண்டனர்.

சீனிவாசபுராவின் கபர்கான் மொஹல்லாவில் வசிக்கும் முன்னிசாப் மகன் பாபா ஜான், 30, என்பரை போலீசார் கைது செய்தனர்.

பலாத்காரம் செய்து மூதாட்டியை கொன்றதையும், 15,000 ரூபாய் பணத்தை கொள்ளை அடித்ததையும் ஒப்புக்கொண்டார்.

தலைமறைவாக இருந்த இவர், கொலை தொடர்பாக என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஊருக்கு வந்தபோது போலீசாரிடம் சிக்கினார்.

Advertisement