தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி: கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு இன்று பலியாகி உள்ளார். கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.



நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா என பல மாநிலங்களில் தினமும் கொரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.


இன்றைய நிலவரப்படி, 5364 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் 221 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந் நிலையில், இன்று விழுப்புரத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார். திண்டிவனம் பேரப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். கட்டடத் தொழிலாளி. ஹைதராபாத்தில் பணி செய்த தியாகராஜன், காய்ச்சல் பாதிப்பு காணப்பட்டால் சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார்.


பின்னர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தியாகராஜன் இன்று உயிரிழந்தார்.


அதே நேரத்தில், கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள கர்ப்பிணிகள் மாஸ்க் அணிந்து கொள்ளலாம் என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதிக காய்ச்சல், இருமல், உடல்வலி போன்ற தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவனைக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும்.


கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை கூறி உள்ளது. இவை கட்டாயம் இல்லை என்றாலும், தங்கள் பாதுகாப்புக்காக மாஸ்க் அணிவது நல்லது என்றும் தெரிவித்துள்ளது.


இதனிடையே, கொரோனாவுக்கு நாட்டு மருந்தை அரசு அங்கீகரித்ததாக வரும் தகவல்கள் உண்மையில்லை என்றும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ள பொது சுகாதாரத் துறை. உலக சுகாதார நிறுவனம் என்ன அறிவுறுத்துகிறதோ அதை தான் அரசு செயல்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement