இளைஞர்கள் அதிகாரம் பெற்றுள்ளனர்: மத்திய அரசு திட்டங்களை பட்டியல் போட்டு அண்ணாமலை பெருமிதம்

சென்னை: கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசு திட்டங்களால் இந்திய இளைஞர்கள் அதிகாரம் பெற்றுள்ளனர் என தமிழக முன்னாள் பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: பிரதமர் மோடியின் திறமையான தலைமையின் கீழ், கடந்த 11 ஆண்டுகளில், இந்தியாவின் இளைஞர்கள் முழுமையான கல்வி, திறன் மேம்பாடு, புதுமை, விளையாட்டு உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளால் அதிகாரம் பெற்றுள்ளனர்.

உலகளாவிய கல்வி புரட்சிக்கான புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ்,1.42 கோடி இளைஞர்கள் பயிற்சி பெற்றனர். தொழில் முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.


இளம் வீரர்களைக் கொண்டு பாதுகாப்பு படை உருவாக்குவதற்கான முன்னோடியாக அக்னி வீரர் திட்டத்தின் கீழ், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆயுதப் படைகளில் சேர்க்கப்பட்டனர்.


18 மாதங்களில் ரோஸ்கர் மெலைன் திட்டத்தின் கீழ் 10 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன.தொடக்க நிறுவனங்கள் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் 68 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.


பிரதமர் பயிற்சித் திட்டத்தில் 1.27 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. பயிற்சிக்குப் பிறகு 82,077 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டனர். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அண்ணாமலை அரசு திட்டங்களை பட்டியலிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement