கண்டமங்கலம் அருகே மின் திருட்டு; தம்பதிக்கு ரூ.3.71 லட்சம் அபராதம்

கண்டமங்கலம்; கண்டமங்கலம் அருகே மின் திருட்டில் ஈடுபட்ட தம்பதிக்கு ரூ.3.71 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மின்துறை அமலாக்கப் பிரிவு அதிகாரி கதிரேசன் தலைமையிலான குழுவினர் கண்டமங்கலம் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் மின் திருட்டு சம்பந்தமாக ஆய்வு நடத்தினர்.

அதில் கண்டமங்கலம் அருகே உள்ள அம்மணங்குப்பம் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ரகுராமன் மற்றும் அவரது மனைவி சுமதி ஆகிய இருவரின் பெயரில் தனித்தனியே வழங்கப்பட்ட மின் இணைப்பில் அதிகளவு மின் திருட்டு நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மின்துறை அதிகாரிகள், மின் திருட்டை கணக்கிட்டு கணவன், மனைவி இருவருக்கும், ரூ.3.71 லட்சத்து 947 ரூபாய் அபராதம் விதித்தனர். அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அபராத தொகையை கட்ட மறுத்தனர்.

இதையடுத்து, தம்பதி மீது மின்துறை கண்டமங்கலம் உதவி செயற்பொறியாளர் சிவகாமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பரணிதரன் ஆகியோர் கொடுத்த புகாரின்பேரில் ரகுராமன், அவரது மனைவி சுமதி மீது கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement