ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் மோசடி: முதியவர் மீது வழக்கு

விழுப்புரம்; விழுப்புரத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்த முதியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம், வண்டிமேடு கே.வி.ஆர்.நகர், அந்திமல்லி தெருவைச் சேர்ந்தவர் மணி, 63; ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது மகன் காமேஸ்வரன், 29; பி.இ., சிவில் முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார்.

விழுப்புரம் தனலட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன், 65; இவர், மணியுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார்.

சில நாட்களில், தனக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகள் பலரை நன்கு தெரியும். அவர்கள் மூலம் காமேஸ்வரனுக்கு, சென்னை மாநகராட்சியில் உதவி பொறியாளர் வேலை வாங்கித்தருவதாக கூறியுள்ளார்.

அதற்கு பணம் செலவாகும் என கூறிய அவர், கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி மணியிடம் இருந்து 3 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால், பல மாதங்களாகியும் காமேஸ்வரனுக்கு வேலை வாங்கித் தரவில்லை.

மணி, பணத்தை திருப்பி தரும்படி கேட்டதால் 2 லட்சம் ரூபாய் மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளார். ஒரு லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

கடந்த வாரம் வீட்டிற்கு சென்று அந்த பணத்தை தரும்படி மணி கேட்டதற்கு, அவரை வைத்தியநாதன் திட்டி அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து மணி அளித்த புகாரின் பேரில், வைத்தியநாதன் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் மோசடி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement