மூன்று நாள் மிதமான மழை! கம்பு, சோளம், நிலக்கடலை பயிரிடலாம்

கோவை; கம்பு பயிரிட இது மிகச் சிறந்த சமயம் என்பதால், விவசாயிகள் இதமான மழையைப் பயன்படுத்தி, கம்பு விதைக்கலாம் என வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மையத்தின் தலைவர் சத்தியமூர்த்தி அறிக்கை:

வரும் 8ம் தேதி வரை கோவை மாவட்டத்தில், பரவலாக லேசான மழை பெய்யக்கூடும். காற்றின் வேகம், மணிக்கு 14 முதல் 20 கி.மீ., வரை வீசக்கூடும்.

ஏற்கனவே உழவு செய்து வைத்திருந்த நிலத்தில், சோளம் பயிரிடலாம். கம்பு பயிரிட இது மிகவும் சிறந்த சமயம். எனவே, விவசாயிகள் பாசன நிலத்தில் கம்பு விதைக்கலாம்.

சித்திரைப் பட்ட நிலக்கடலை சாகுபடிக்கு இது உகந்த பருவம். விதைப்பு செய்தால், அனைத்து பயிர்களுக்கும் உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும்.

மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில், பிற்பகலுக்குப் பிறகு, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதைத் தவிர்க்கவும். காற்றின் வேகம் அதிகம் இருக்கும் என்பதால், கால்நடைக் கொட்டில்களை கவனமாக பராமரிக்கவும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement