முகூர்த்த நாளில் நெடுஞ்சாலைகளில் திக்குமுக்காடிய வாகனங்கள்

பல்லடம்; முகூர்த்த நாளான நேற்று, பல்லடத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் வாகனங்களால் நிரம்பி வழிந்தன.

பல்லடத்தில், கோவை - -திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், மதுரை,

பொள்ளாச்சி, கொச்சி, உடுமலை, அவிநாசி செல்லும் மாநில நெடுஞ்சாலைகள் இணைகின்றன. பல்லடம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை, சரக்கு போக்குவரத்துக்கு பிரதான வழித்தடமாக உள்ளது. சாதாரண நாட்களிலேயே, கன்டெய்னர் லாரிகள், கனரக வாகனங்கள், டிப்பர் லாரிகள் என, தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்துச் செல்லும் நிலையில், சுப முகூர்த்த நாட்களில், கார்கள், வேன்கள் உள்ளிட்டவற்றால் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரிக்கிறது.

முகூர்த்த நாளான நேற்று, பல்லடம் தேசிய நெடுஞ்சாலை உட்பட, அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. நான்கு திசைகளில் இருந்தும் வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால், போலீசார், போக்குவரத்து நெரிசலை எப்படி கட்டுப்படுத்துவது என்றே தெரியாமல் திணறினர். உயிர்காக்கும் ஆம்புலன்ஸ்கள் ஆங்காங்கே அலறிக் கொண்டிருக்க, நெடுஞ்சாலைகள் முழுவதும் வாகனங்கள் நிரம்பி வழிந்தன. கிடைத்த இடைவெளிகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் வளைந்து நெளிந்து செல்ல, பாதசாரிகள் ரோட்டை கடக்க மிகவும் சிரமப்பட்டனர்.

செவிகளுக்கு எட்டுமா?

பல்லடத்தில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதித்தது. பல்லடத்தின் போக்குவரத்து பிரச்னைக்கு என்று தான் இதற்கு தீர்வு கிடைக்குமோ என, பொதுமக்கள் புலம்புவது ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் செவிகளுக்குத்தான் எட்டவில்லையோ என்ற கேள்வி எழுகிறது.

Advertisement