சுருளிப்பட்டி மெயின் ரோட்டில் கழிவு நீர் தேங்கி சுகாதாரக்கேடு பகலில் துர்நாற்றம், இரவில் கொசுக்கடியால் அவதி

கம்பம்: கம்பம் மெயின் ரோட்டில் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்பதால், கொசுக் கடி , துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களின் தொடர் வலியுறுத்தலை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சாக்கடையை சுத்தம் செய்யும் பணிகளை துவக்கி உள்ளது.

கம்பம் ஒன்றியம், சுருளிப்பட்டி ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. சுருளிஅருவிக்கு இந்த ஊராட்சி வழியாக தான் செல்ல வேண்டும்.

ஊராட்சி பகுதியில் ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இங்குள்ள மெயின்ரோட்டில் சாக்கடை சுத்தம் செய்யாததால், கழிவுகள் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதால் வீடுகளுக்கு உள்ளே இருக்க முடிவதில்லை என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்பதால் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களும் பாதிக்கப்படுகின்றன. இப்பிரச்னை குறித்து இங்கு வசிப்பவர்கள் உயர் அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளனர்.

அதன் பேரில் ஊராட்சி நிர்வாகம் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியை துவங்கியுள்ளது.

அருகில் வசிக்கும் பெண்கள் கூறுகையில், 'சாக்கடை சுத்தம் செய்யாததால் துர்நாற்றம் வீசி வீடுகளில் உட்கார முடியவில்லை. கொசு கடியால் இரவில் துாங்க முடியவில்லை. சுத்தம் செய்ய பல முறை கூறியும் நடவடிக்கை இல்லை. தற்போது பணியாளர்கள் வந்து சுத்தம் செய்கின்றனர்,'என்றனர்.

ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'ஊராட்சியில் துப்புரவு பணியாளர் ஒருவர் கூட இல்லை. தூய்மை காவலர்கள் குப்பை மட்டுமே வாங்கி சுத்தம் செய்வார்கள்.

இந்நிலையில் சாக்கடை கழிவு நீர் செல்ல முடியாத வகையில் வீடுகளின் படிக்கட்டுக்கள் கட்டியுள்ளனர். மண் மேவி சாக்கடை அடைத்துள்ளது. ஒப்பந்த முறையில் சாக்கடையை தூர்வாரும் பணி நடக்கிறது. இரண்டு நாட்களுக்குள் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகள் நிறைவு பெறும்,' என்றனர்.

Advertisement