ராமேஸ்வரத்தில் அதிவேக இன்ஜின் படகுகள் பாதுகாப்பு கேள்விக்குறி

ராமேஸ்வரம்,:தடையை மீறி ராமேஸ்வரம் பகுதியில் அதிவேக இன்ஜின் பொருத்திய படகில் மீன் பிடிப்பதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.

ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் இருந்து இலங்கை கடல் எல்லை 20 கி.மீ., முதல் 40 கி.மீ.,ல் உள்ளது. இதனால் இலங்கையில் இருந்து மீனவர்கள் போர்வையில் போராளிகள், கடத்தல்காரர்கள் ஊடுருவல் அதிகமாக உள்ளது.

இதனை தடுக்க கடந்த 30 ஆண்டுகளாக ராமேஸ்வரம் பகுதியில் விசைப்படகில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்பட்டு இந்திய- இலங்கை கடல் எல்லையில் இரு நாட்டு பாதுகாப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டுப்படகிற்கும் மீன்துறையினர் கட்டுப்பாடு விதித்து, 24 குதிரை திறன் உள்ள இன்ஜின் மட்டுமே பொருத்த மீன்துறை உத்தரவிட்டது. ஆனால் தடையை மீறி ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பனில் 40க்கும் மேற்பட்ட பைபர் கிளாஸ் படகில் 90 மற்றும் 95 குதிரை திறன் கொண்ட இன்ஜினை பொருத்தி மீன்பிடிக்க செல்கின்றனர்.

இந்த இன்ஜின் மூலம் ஒரு மணி நேரத்தில் இலங்கை சென்று விடலாம். இன்ஜின் சத்தமும் மிக குறைவாக இருக்கும். இதனால் பாதுகாப்பு படையினர் கண்ணில் மண்ணை தூவி விட்டு கடத்தல்காரர்கள், பயங்கரவாதிகள் ராமேஸ்வரம் பகுதியில் ஊடுருவ வாய்ப்பு உள்ளது.

இந்த இன்ஜின்கள் பயன்பாடு தெரிந்தும் மீன்துறையினர் கண்டுகொள்வதில்லை. இதனால் கடல் பகுதி பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

Advertisement