மாட்டுபட்டியில் படகு சேவை மீண்டும் துவக்கம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

மூணாறு:மாட்டுபட்டி அணையில் கனமழையால் முடங்கிய சுற்றுலா படகு சேவை 13 நாட்களுக்கு பிறகு துவங்கியது.

கேரளாவில் இந்தாண்டு வழக்கத்தை விட முன்னதாக மே 24ல் தென்மேற்கு பருவ மழை துவங்கி ஒரு வாரம் கொட்டியது. அப்போது இடுக்கி மாவட்டத்தில் மூன்று பேர் பலியான நிலையில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. மண், நிலச்சரிவு அபாயத்தால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பகுதிகளை மூடவும், நீர்நிலை, சாகச சுற்றுலாக்களுக்கு தடை விதித்தும் மே 28ல் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்நிலையில் சுற்றுலாவுக்கான தடை மே 31 ல் வாபஸ் பெறப்பட்ட நிலையில் நீர்நிலை, சாகச சுற்றுலாக்களின் தடை உத்தரவு நேற்று மாலை வாபஸ் பெறப்பட்டதால் சுற்றுலா தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் பயன்பாட்டுக்கு வந்தன.

மூணாறு அருகில் உள்ள மாட்டுபட்டி அணையில் மாவட்ட சுற்றுலா துறை, மின்வாரியத்தின் ஹைடல் டூரிசம் சார்பில் அதிவேக படகுகள் உட்பட பல்வேறு வகை படகுகள் இயக்கப்படுகின்றன. அங்கு கனமழையால் மே 24ல் படகு சேவை நிறுத்தப்பட்டது. அணையில் 13 நாட்களுக்கு பிறகு நேற்று காலை முதல் படகு சேவை துவங்கியது. அதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement