முருகன் மாநாடு குறித்த வழக்கு; போலீசார் மீது நீதிபதி அதிருப்தி

13


மதுரை: மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி முருகனின் அறுபடை வீடுகளை குறிக்கும் மாதிரி வடிவங்களை (மினியேச்சர்கள்) மாநாட்டு வளாகத்தில் தற்காலிகமாக நிறுவ போலீசார் அனுமதி மறுத்ததை எதிர்த்து தாக்கலான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.


ஹிந்து முன்னணி மாநிலச் செயலர் முத்துக்குமார் தாக்கல் செய்த மனு:ஹிந்துக்களிடம் பக்தியை அதிகரிக்கும் நோக்கில் மதுரையில் வரும் 22ல் 'முருக பக்தர்கள்' மாநாடு நடைபெற உள்ளது.


முருகனின் அறுபடை வீடுகளை குறிக்கும் மாதிரி வடிவங்கள் மாநாட்டு வளாகத்தில் தற்காலிகமாக நிறுவப்பட உள்ளன. இதற்கு, அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனுமதி மறுத்துள்ளதோடு, பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை போலீசார் மிரட்டியுள்ளனர்.

போலீஸ் நிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.


இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.


மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
அரசு தரப்பு: மாதிரி வடிவங்கள் வைப்பதற்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அனுமதித்தால் அருகிலுள்ள வீடுகள், பள்ளிகளுக்கு இடையூறு ஏற்படும்.

நீதிபதி: மதுரையில் பல மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது மனுதாரர் தரப்பு மினியேச்சர்கள் அமைத்து பக்தர்கள் வழிபட அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல.


இது ஜனநாயக நாடு. போலீசார் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அரசியல் சார்புத் தன்மையுடன் செயல்படக்கூடாது.



போலீஸ் கமிஷனர் ஜூன் 9ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அன்று உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement