சங்கிகள் நடத்தும் முருகன் மாநாடு: சேகர்பாபு விமர்சனம்

20

சென்னை: ''மதத்தால், இனத்தால் மக்களை பிளவுபடுத்தவே, சங்கிகளின் முருகன் மாநாடு நடத்தப்படுகிறது,'' என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்து உள்ளார்.


சென்னை புரசைவாக்கம், கங்காதரேஸ்வரர் கோவில் தேரோட்ட விழாவில் பங்கேற்ற ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:


திருச்செந்துார் முருகன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான நேரத்தை மாற்றக்கோரி,
நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது போல திட்டங்கள் பல உருவாகலாம்.


அது நல்ல திட்டமாகவோ, சதி திட்டமாகவோ இருக்கலாம். நம்மை பொறுத்தவரை நேர் வழியில் நேர்மையாக செல்கிறோம். கண்டிப்பாக நீதி நம் பக்கம் இருக்கும்.


திருப்பரங்குன்றத்தில் நடக்கவுள்ள முருகன் மாநாடு, சங்கிகள் நடத்தும் மாநாடு; அது, அரசியல் மாநாடு. அரசு நடத்திய முருகன் மாநாட்டில், 27 நாடுகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் பங்கேற்றனர்.


இரண்டு நாள் நிகழ்ச்சியில், தினமும் எட்டு லட்சம் பக்தர்கள் வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ஏழு நாள் விழாவாக மாற்றப்பட்டது.


அதையும், இதையும் ஒன்றாக்காதீர்கள். இது, அரசியல் சூழலுக்காக மதத்தால், இனத்தால் மக்களை எப்படியெல்லாம் பிளவுபடுத்த முடியுமோ, அதற்கான ஆயுதமாக இந்த மாநாட்டை நடத்தஉள்ளனர்.

காலில் நகம் வளர்ந்த நாளில் இருந்தே, தமிழகத்தை சுற்றிச்சுழன்று அரசியல் கற்றவர், முதல்வர். அவர் கால் படாத தெருக்களே இல்லை.



அவருக்கு, தமிழிசை போன்றவர்கள் ஆலோசனை சொல்ல அவசியம் இல்லை.
அவரின் ஆலோசனை, போதனைகளை கேட்டு பா.ஜ., நடந்து கொண்டதால் தான், ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வி என்ற பரிசை மக்கள் தருகின்றனர். அவரை மத்தியில் சென்று ஆலோசனை வழங்கச் சொல்லுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement