பேரிடரை எதிர்கொள்ள உலகளாவிய டிஜிட்டல் களஞ்சியம் அவசியம்; பிரதமர் மோடி வலியுறுத்தல்


புதுடில்லி: உலக நாடுகள் பேரிடரில் இருந்து மீண்டு வர உலகளாவிய டிஜிட்டல் களஞ்சியம் அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


சர்வதேச பேரிடரை எதிர்கொள்ளும் வகையிலான உள்கட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டார். அதில், அவர் பேசியதாவது; கடந்த காலங்களில் இந்தியா, வங்கதேசத்தை ரேமல் புயலும், கரீபியன் தீவுகளை ஹரிக்கேன் பெர்ல் புயலும், தென்கிழக்கு ஆசியாவை தைபூர் யாகி புயலும், அமெரிக்காவை ஹரிக்கேன் ஹெலின் புயலும் தாக்கியது.


1999ல் சூப்பர் புயலும், 2004ம் ஆண்டு சுனாமியும் இந்தியாவை தாக்கியது. இதையடுத்து, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் புயல் பாதுகாப்பு மையங்கள் கட்டப்பட்டன. 29 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை அமைப்பை உருவாக்கவும் நாங்கள் உதவினோம்.


பேரிடரை எதிர்கொள்ளும் விதமான உள்கட்டமைப்புகளை 25 சிறிய தீவு நாடுகளில் கொண்டு வரப்பட்டு வருகிறது. பேரழிவைத் தாங்கும் வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள் கட்டப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை அமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.


எதிர்கால சவால்களை சமாளிக்க திறன்மிக்க படை தேவைப்படுகிறது. எனவே, உயர்கல்வி முறையில் திறன் மேம்பாட்டு திட்டங்கள், படிப்புகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். பேரழிவை சந்தித்த எத்தனையோ நாடுகள், மீண்டு எழுந்துள்ளன. இந்த அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஒருங்கிணைக்க, ஒரு உலகளாவிய டிஜிட்டல் களஞ்சியம் உருவாக்கப்பட வேண்டும். பேரிடரில் இருந்து மீண்டு வர நிதி தேவைப்படும். வளரும் நாடுகளுக்கு நிதி உதவிகள் எளிதில் கிடைக்க செயல்திறன் மிக்க திட்டங்களை வடிவமைக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement