தமிழகம் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

10

சென்னை: 'பா.ஜ., அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையை செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சம் நிறைந்தது. மக்கள்தொகை கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வளர்ச்சியடைந்த தென் மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:



மக்கள் தொகை கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதை தொடர்ந்து நடக்கவுள்ள தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல. நான் துவக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து, நம் வாசற்படி வரை வந்து விட்டது.


மத்திய பா.ஜ., அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையை செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சம் நிறைந்தது.

தென்னகத்தின் குரல்



மக்கள் தொகை கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வளர்ச்சியடைந்த தென் மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன.



அதே வேளையில், மக்கள் தொகை கட்டுப்பாட்டை பல ஆண்டுகளாக காற்றில் பறக்க விட்ட மாநிலங்களோ, பார்லிமென்டில் கூடுதல் எம்.பி.,க்களை பெற இருக்கின்றன.


அநீதியான இந்த நடவடிக்கை, கூட்டாட்சியின் சமநிலையை குலைத்து, பொறுப்பற்ற தன்மைக்கு வெகுமதி அளிக்கிறது. இந்த சதி திட்டம் குறித்து, நான் முன்பே எச்சரித்து இருந்தேன்.


தற்போது, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், பா.ஜ., எப்படி இந்த கைவரிசையை காட்டப்போகிறது என்பதை விளக்கமாக எடுத்து கூறியுள்ளார்.


நாம் விழிப்போடு இருப்பது மட்டுமல்ல; தென்னகத்தின் குரலை காப்பாற்றிக் கொள்வதற்கான வியூகங்களையும் தீட்ட வேண்டிய தருணம் இது.


கடந்த 1971ம் ஆண்டு கணக்கெடுப்புக்கு பின், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் தான், அதற்கடுத்து உடனே நிகழும் தொகுதி மறுவரையறைக்கு அடிப்படையாக அமையும்.


தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்து, தனக்கு சாதகமான முறையில், லோக்சபா எம்.பி., இடங்களை பா.ஜ., நிர்ணயித்து கொள்ளத்தான் இது வழி ஏற்படுத்தும்.


தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின கவலைகள் கருத்தில் கொள்ளப்படும் என, மத்திய உள்துறை அமைச்சகம் சொல்கிறது.

அடிமை துரோகிகள்



ஆனால், இவை தெளிவற்ற மழுப்பல் பதில்கள். இவர்கள் சொல்வதை தண்ணீரில் தான் எழுதி வைக்க வேண்டும். உரிய அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை நிறைவேற்றுங்கள் என்று தான் நாங்கள் கேட்கிறோம்.



சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய பின், என்ன நடந்தது என்று பார்த்தாலே, இவர்களின் பேச்சின் லட்சணம் புரிந்து விடும்.


ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு சொன்னது; தேர்தலும் நடந்தது; உச்ச நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும், ஜம்மு - காஷ்மீர் இன்னும் யூனியன் பிரதேசமாகத்தான் இருக்கிறது. இப்படிபட்ட சத்தியவான்களோடு நாம் போராடிக்கொண்டு இருக்கிறோம்.


வரும் 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், தொகுதி மறுவரையறையை மத்திய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்கு குறைந்து விடும்.


அ.தி.மு.க., போன்ற அடிமை துரோகிகள் தங்களின் சுயநலத்துக்காக பா.ஜ., முன் மண்டியிட்டாலும், தி.மு.க., தலைமையில் ஓரணியில் தமிழகம் அணிவகுக்கும்.


தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ள ஒரே காரணத்துக்காக, தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement