77 மாவட்ட தலைவர்கள் நேரடி தேர்வு செய்யும் ராகுல்

7


மேலிட பார்வையாளர்கள் தலைமையில் நால்வர் குழு அமைத்து, தமிழக காங்கிரசுக்கான 77 மாவட்ட தலைவர்களை, ராகுல் நேரடியாக தேர்வு செய்ய உள்ளார்.


தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், கட்சியின் கட்டமைப்பை சீரமைக்கவும், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் முடிவு செய்துள்ளார்.



அதன்படி, மாவட்ட தலைவர் பொறுப்புக்கு கூடுதல் அதிகாரம் தரப்படுகிறது. வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை, இனிமேல் மாவட்ட தலைவர்களே எடுக்க உள்ளனர்.


தேர்தலில் போட்டியிடுவதிலும், மாவட்ட தலைவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. மூன்றாண்டுகள் மாவட்ட தலைவராக பணியாற்றியவரே, தேர்தல் களத்திற்கு வர முடியும். ராகுல் வகுத்துள்ள இந்த புதிய திட்டத்தை, ம.பி., குஜராத் மாநில காங்கிரசில் அமல்படுத்தி உள்ளனர்.

அடுத்த கட்டமாக, வரும் அக்டோபருக்குள் தமிழகம், ஹிமாச்சல் மாநிலங்களில், மாவட்ட தலைவர்களை தேர்வு செய்து நியமிக்க, ராகுல் திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து, தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:



தமிழக காங்கிரசில் அமைப்பு ரீதியாக 77 மாவட்டங்கள் உள்ளன. அவற்றில், 10 மாவட்ட தலைவர்கள் பதவி காலியாக உள்ளன.



அவற்றுடன் சேர்த்து, உடனடியாக 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு புதிய தலைவர்களை நியமிக்க வேண்டும் என, மேலிடத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


இதை பரிசீலித்த மேலிடம், ராகுல் திட்டப்படி, 77 மாவட்டங்களுக்கும் புதிய தலைவர்களை நியமிக்க முன்வந்துள்ளது. எனவே, விரைவில் டில்லியில இருந்து ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் என, 77 பார்வையாளர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.


அந்த பார்வையாளர் தலைமையில், தமிழக காங்கிரசை சேர்ந்த மூவர் அடங்கிய குழு, மாவட்டந்தோறும் அமைக்கப்படும்.


அக்குழு சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு சென்று, கட்சியினரை சந்தித்து பேசும். அதன் அடிப்படையில் மாவட்ட தலைவர் பதவிக்கு, மூவர் பெயரை மேலிடத்திற்கு பரிந்துரை செய்யும். அதில் ஒருவரை ராகுல் தேர்வு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.



- நமது நிருபர் -

Advertisement