'ஷா' என்றாலே தி.மு.க.,வுக்கு கிலி; நடுங்க வைக்கும் நாகேந்திரன்

14

மதுரை : ''பா.ம.க., உட்கட்சி பிரச்னையில் பா.ஜ., சமரசம் செய்யவில்லை,'' என பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

மதுரையில் அவர் அளித்த பேட்டி:



மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று இரவு மதுரை வருகிறார். நாளை காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு, மாலையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார்.

ஆட்சி கலைப்பு



அவர், பா.ம.க., தலைவர் அன்புமணியை சந்திப்பது குறித்து இதுவரை திட்டம் எதுவும் இல்லை. தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி வர வேண்டும் என்பதற்காக கூட்டம் நடக்கிறது.



அமித் ஷா எத்தனை முறை தமிழகம் வந்தாலும், தி.மு.க.,வை ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் முதல்வர் ஸ்டாலின். அந்த 'ஷா' தான் மஹாராஷ்டிராவில் ஆட்சியை கொண்டு வந்தார்; டில்லியிலும் கொண்டு வந்தார்.


தி.மு.க.,வுக்கு ஷா என்றால் எப்போதும் பயம் உண்டு. 1976ல் தி.மு.க., ஆட்சியை கலைத்தது கே.கே.ஷா என்ற கவர்னர் தான். அன்று முதல், ஷா என்ற பெயரை கேட்டாலே தி.மு.க.,வுக்கு பயம் தான்.


பா.ம.க., பிரச்னையில் பா.ஜ., சமரசத்தில் ஈடுபடவில்லை. ஆடிட்டர் குருமூர்த்தி, மக்கள் நலன் விரும்பியாக ராமதாசை சந்தித்திருக்கலாம். கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., இருந்தது.


அப்போது, அந்தக் கூட்டணியை ராமதாஸ் விரும்பவில்லை என கூறுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தமிழக பா.ஜ.,வில் நிறைய தலைவர்கள் உள்ளனர்.

சுகமான சுமை



அவர்களில் பலர் என்னை காட்டிலும் சீனியர். அனைவரும் என்னை சக தலைவனாகவே பார்க்கின்றனர். அதனால், அவர்களோடு எனக்கு எந்த நெருடலும் இல்லை. தமிழக பா.ஜ., தலைவர் பதவி எனக்கு சுகமான சுமை.


தி.மு.க.,வுக்கு எதிரானவர்கள், ஓரணியாக திரள விரும்புகிறோம். இதில், ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார்; பா.ம.க.,வும் வரும்; தே.மு.தி.க., இணைவது பற்றி பொறுத்திருந்து பார்ப்போம்.



வேறு கட்சிகள் வருவது குறித்து முருக பக்தர்கள் மாநாட்டுக்கு முன் சொல்கிறோம். வேல் யாத்திரை, ரத யாத்திரை போல என்னுடைய யாத்திரை, சட்டசபைக்கு அதிக பா.ஜ., உறுப்பினர்களை அழைத்து செல்வதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement