274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது

காத்மாண்டு: நேபாளத்தில் சட்டவிரோதமாக 274 கிராம் தங்கம் வைத்திருந்த இந்தியரை போலீசார் கைது செய்தனர்.
நேபாளத்தின் எல்லை மற்றும் காத்மாண்டு போன்ற பெரிய நகரங்களில் சட்டவிரோத தங்க கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றன.அதிக ஏற்றுமதி வரியை தவிர்க்க பெரிய அளவில் தங்கம் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் நேபாள அரசு, இதனை தடுக்க பல்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்தி பாதுகாப்பு சோதனைகளை நடத்துகிறது.
இந்த நிலையில் மேற்குவங்கத்தை சேர்ந்தவர் மகாதேவ் சமந்தா 31, சமீபத்தில் நேபாளம் சென்றுள்ளார். நேற்று தலைநகர் காத்மாண்டில் பாதுகாப்புக்காக போலீசார் சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில் சந்திரகிரி நகராட்சியில் உள்ள நாக்துங்காவில் பஸ்களில் சோதனை நடத்தியபோது, மகாதேவ், சட்டவிரோதமாக சுங்கவரி செலுத்தாமல் 274 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரிடமிருந்த 274 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.