அதிநவீன வசதியுடன் உருவாகும் பிரம்மாண்ட சிறை

பெ.நா.பாளையம், ; கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட ஒன்னிபாளையம் ரோட்டில் அதிநவீன புதிய மத்திய சிறைச்சாலை வளாகம் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்படுகிறது.
கோவையில் தற்போது காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை கடந்த, 1872ம் ஆண்டு நிறுவப்பட்டது.
தமிழகத்தில் உள்ள மிக பழமையான சிறைச்சாலைகளில் இதுவும் ஒன்று. இங்குள்ள பல்வேறு பிளாக்குகளில் தற்போது, 200 பெண் கைதிகள் உள்ளிட்ட, 2,500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இட நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காணவும், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன், உயர்ந்த பாதுகாப்புடன், கைதிகளை அடைத்து வைக்க பெரியநாயக்கன்பாளையம் அருகே, ஒன்னிபாளையம் ரோட்டில், 327.33 கோடி ரூபாய் செலவில் புதிய மத்திய சிறைச்சாலை வளாகம் கட்ட கடந்த, மே 19ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து பணிகள் விறு,விறுப்பாக நடந்து வருகின்றன.
புதிய மத்திய சிறைச்சாலை வளாகம், 95.72 ஏக்கரில், மூன்று கட்டங்களாக கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டத்தில் மத்திய சிறை வளாகம் மற்றும் ஆண்கள் சிறை கட்டப்படுகிறது.
இதில் ஆண்கள் சிறை மட்டும், 17.02 ஏக்கரில் அமைகிறது. இரண்டாம் கட்டத்தில் பெண்கள் சிறை, 4.43 ஏக்கரில் அமைகிறது. மேலும், 111 சிறைத்துறை அலுவலர்களுக்கான குவாட்டர்ஸ், 5.95 ஏக்கரில் அமைகிறது.
முதல் பகுதி கட்டுமானத்தில் நிர்வாக அலுவலகம், ரிமாண்ட் கைதிகளை அடைத்தல், குற்றவாளிகளுக்கான ப்ளாக், கடுங்காவல் தண்டனை குற்றவாளிகளுக்கான அறை, சிறை மருத்துவமனை, சமையலறை, சமையல் காஸ் மற்றும் பாய்லர் அறை, தின்பண்டங்கள் தயாரித்தல் அறை, நீதிமன்றம், தூக்கு மேடை, ஜெனரேட்டர் அறை, காவலர்கள் அறை, கைதிகளை அழைத்து வரும் வாகனங்களை நிறுத்த இடம் ஆகியவை அமைக்கப்படுகின்றன. இது தவிர, சிறையில், ஒரு கண்காணிப்பாளர், 2 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 2 ஜெயிலர்கள், 6 உதவி ஜெயிலர்கள், 100 ஜெயில் வார்டர்கள் பணியாற்ற ஐந்து தளங்களுடன் கட்டடம் கட்டப்படுகின்றன.
இதே போல பெண்கள் சிறை வளாகத்தில் நிர்வாக அலுவலகம், ரிமாண்ட் கைதிகள் அடைக்கும் அறைகள், கடுங்காவல் குற்றவாளிகளை அடைக்கும் அறைகள், சமையலறை, நீதிமன்றம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்படுகின்றன.
இது குறித்து, சிறை துறை அதிகாரிகள் கூறுகையில்,' புதிய சிறை அனைத்து அதிநவீன வசதிகளுடன் கட்டப்படும். சிறை கண்காணிப்பு அதிநவீன தொழில்நுட்பத்துடன் இணைந்ததாக இருக்கும்.
இங்கு ஒரே நேரத்தில், 3 ஆயிரம் கைதிகளை அடைத்து வைக்கலாம். முதல் கட்ட கட்டுமான பணி, 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 211.57 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது' என்றனர்.










மேலும்
-
இந்தியாவில் தீவிர வறுமை குறைந்தது: உலக வங்கி அறிக்கை
-
தனியார் மயமாக்கல்: காங்., தலைவர் குற்றச்சாட்டை நிராகரித்தார் சுற்றுச்சூழல் அமைச்சர்
-
அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு; பின்வாங்கிய எலான் மஸ்க்
-
இனி 10 மணி நேரம் வேலை: ஆந்திர அரசு முடிவு
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது