'பிடிவாதம் காட்டாமல் முடிவெடுங்கள்' தே.மு.தி.க.,வுக்கு பா.ஜ., அறிவுரை

சென்னை: 'உங்கள் பலம் என்ன என்பது, எங்களை விட உங்களுக்கு தெரியும்; பிடிவாதம் காட்டாமல் கூட்டணி முடிவை சொல்லுங்கள்' என, தே.மு.தி.க., தலைமையிடம், பா.ஜ., மேலிடம் கூறிய தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தலுக்காக, பலமான கூட்டணி அமைக்கும் நடவடிக்கையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளார். இதற்காக அவரே, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, கடந்த ஏப்ரல், 11ல் சந்தித்து கூட்டணியை அறிவித்தார்.
அம்மாத இறுதியிலேயே பா.ம.க., - தே.மு.தி.க.,வை கூட்டணிக்குள் சேர்த்து, இம்மாதம் முதல் ஒரு மாவட்டத்திற்கு ஒரு கூட்டம் நடத்தி, கூட்டணியை பலப்படுத்த, அமித் ஷா திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், பஹல்காமில் நடந்த தாக்குதல் விவகாரத்தால், அமித் ஷா பயணங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. அவரை இம்மாதம், கோவைக்கு அழைத்து வர, கட்சியினர் திட்டமிட்டனர். ஆனால், தென் மாவட்டங்களில் தேர்தல் பணிகளை வேகப்படுத்த, மதுரைக்கு வரவே அமித் ஷா விரும்பினார்.
அதற்கு ஏற்ப, நாளை மதுரை வரும் அமித் ஷா, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கிறார். இம்மாதத்திற்குள், தமிழகத்தில் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை இறுதி செய்து, வரும் செப்டம்பரில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். அதில், கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் பங்கேற்க வைத்து, தமிழகத்தின் தேர்தல் பிரசாரத்தை துவக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.
இதனால் தான் பா.ம.க, - தே.மு.தி.க.,வை கூட்டணிக்குள் சேர்க்க பேச்சு வேகமாக நடத்தப்படுகிறது. ஆனால், 'அடுத்த ஆண்டு துவக்கத்தில் தான் கூட்டணியை அறிவிப்போம்' என, தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இதை சாதகமாக பயன்படுத்த தி.மு.க., நினைக்கிறது. தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்க்க, அக்கட்சி விருப்பமில்லை. ஆனால், விஜயகாந்த் ஆதரவாளர்களை வளைக்க முயற்சிக்கிறது. இதற்காகவே, மதுரை பொதுக்குழு கூட்டத்தில், விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது.
ராஜ்யசபா சீட் விஷயத்தில், தங்களை ஏமாற்றியதாக அ.தி.மு.க., மீது தே.மு.தி.க., கோபமாக இருப்பதால், அக்கட்சியை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில், பா.ஜ., மேலிடம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, மேலிட தலைவர்களின் சார்பில், தே.மு.தி.க., தலைமையிடம் பேசப்பட்டுள்ளது.
'உங்களின் பலம் என்ன என்பது, எங்களை விட உங்களுக்கு நன்கு தெரியும். கூட்டணியை தேர்தலுக்கு நெருக்கத்தில் அறிவித்தால், தொண்டர்கள் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுவது சிரமம். எனவேதான், கூட்டணியை முன்கூட்டியே முடிவு செய்யும் பணியில், அமித் ஷா தீவிரம் காட்டுகிறார். கூட்டணியில் சேருவதில் பிடிவாதம் காட்டாமல் முடிவு எடுங்கள்' என, பிரேமலதாவிடம் சொல்லப்பட்டு உள்ளது.
ஆனால், பா.ஜ., மேலிட தவைர்கள் நேரடியாக வந்து பேச வேண்டும் என்று தே.மு.தி.க., தலைமை விரும்புகிறது. இந்த விபரமும், மேலிட தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.












மேலும்
-
பேரிடரை எதிர்கொள்ள உலகளாவிய டிஜிட்டல் களஞ்சியம் அவசியம்; பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
இந்தியாவில் தீவிர வறுமை குறைந்தது: உலக வங்கி அறிக்கை
-
தனியார் மயமாக்கல்: காங்., தலைவர் குற்றச்சாட்டை நிராகரித்தார் சுற்றுச்சூழல் அமைச்சர்
-
அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு; பின்வாங்கிய எலான் மஸ்க்
-
இனி 10 மணி நேரம் வேலை: ஆந்திர அரசு முடிவு
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!