ஓடும் ரயிலில் மனைவியிடம் கொள்ளை; தடுத்த டாக்டர் கை துண்டானது

17



மும்பை: மஹாராஷ்டிரவின் மும்பை அருகே ஓடும் ரயிலில் பெண் டாக்டரிடம் கொள்ளையடித்த நபரை தடுத்த கணவர், தவறி விழுந்ததில் அவரது கை துண்டானது.


மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த டாக்டர் தம்பதி யோகேஷ் தேஷ்முக், 50, தீபாலி தேஷ்முக், 44. இவர்கள் 9 வயது மகளுடன் குர்லாவில் இருந்து நான்டெட்டுக்கு நேற்று, எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுகொண்டிருந்தனர்.


காஞ்சுமார்க் - பாண்டூப் இடையே ரயில் சென்றபோது திடீரென தீபாலி வைத்திருந்த ஹேண்ட்பேக்கை பறித்து கொண்டு கொள்ளையன் தப்பமுயன்றான். தீபாலி கெட்டியாக பேக்கை பிடித்திருந்ததால், அவரை ரயில் பெட்டியின் கதவு வரை இழுத்தபடி கொள்ளையன் சென்றான். இதை பார்த்த யோகேஷ் கொள்ளையனை தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது இருவரும் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்தனர். இதில் தேஷ்முக்கின் ஒரு கை, ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டானது.


தீபாலி லேசான காயத்துடன் தப்பினார். அந்த நேரத்தில் ரயில் மெதுவாக சென்றதால் கொள்ளையன் பேக்குடன் தப்பி சென்றான். அந்த பேக்கில் 5,000 ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில் அவ்வழியே வேனில் சென்ற நபர் டாக்டர் தம்பதியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். இதற்கிடையே டாக்டர் தம்பதியின் மகள் பாதுகாப்பாக கல்யாண் ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டார். கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் தப்பியோடிய கொள்ளையனை தேடிவருகின்றனர்.

Advertisement