நெல்லை அரசு பஸ் பணிமனையில் 18,000 லிட்டர் டீசல் இருப்பு குறைவு; 6 பேர் 'சஸ்பெண்ட்'

5

திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு பஸ் பணிமனையில் 18,000 லிட்டர் டீசல் இருப்பு குறைந்த சம்பவத்தில் கிளை மேலாளர் உட்பட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தின் தாமிரபரணி பணிமனை வண்ணார்பேட்டையில் உள்ளது. அங்கு கடந்த சில மாதங்களில் அரசு பஸ்களுக்கு பயன்படுத்தப்பட்ட டீசலில் 18,000 லிட்டர் இருப்பு குறைந்த நிலையில் அதற்கான கணக்கு இல்லாதது தணிக்கையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தாமிரபரணி பணிமனை கிளை மேலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் உதவி பொறியாளர், மேற்பார்வையாளர், தொழில்நுட்ப உதவியாளர்கள் என 6 பேரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து கழகநிர்வாக இயக்குனர் தசரதன் உத்தரவிட்டார்.

போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில் ' டீசல் எதுவும் திருட்டுப் போகவில்லை. வழக்கமாக 10 லிட்டர் டீசல் பயன்படுத்தும் டிரைவர் தான் சிக்கனமாக இருந்ததாக கூறி 8 லிட்டர் தான் பயன்படுத்தியதாக புள்ளி விபரம் சமர்ப்பிப்பார். இவ்வாறு டீசல் சிக்கனம் கணக்கெழுதியதில் 18,000 லிட்டர் குறைகிறது.



இது தணிக்கையில் தெரியவந்தது. இப்போதைக்கு தொடர்புடைய ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.விசாரணை நடக்கிறது 'என்றார். எனினும் இதுகுறித்து வெளிப்படையான தகவலை நிர்வாக இயக்குனர் கூற மறுத்துவிட்டார். அரசு தரப்பில் இது குறித்து விளக்கம் அளித்தால் தான் பொதுமக்களுக்கு உண்மை நிலை தெரிய வரும்.

Advertisement