சாலையோரம் நின்ற காரில் பாதிரியார் சடலமாக மீட்பு

4

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரில், இறந்து கிடந்த பாதிரியாரின் உடல் மீட்கப்பட்டது.


சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் கிளியாற்று பாலம் அருகே உள்ள காலி இடத்தில், 'கியா' கார் ஒன்று, நேற்றுமுன்தினம் மாலை முதல், ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.



இந்த காருக்குள், ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மதுராந்தகம் போலீசார் அங்கு சென்றனர்.


கார் கதவு மூடப்பட்டிருந்த நிலையில், கார் ஓட்டுநர், அவரது இருக்கையில் சாய்ந்தபடி, இறந்து கிடந்தார்.


கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். பின், போலீசார் கார் கண்ணாடியை உடைத்து, ஓட்டுநர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில், மதுவுடன் தண்ணீர் கலந்த பாட்டிலும் இருந்துள்ளது.


கார் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, மேல்மருவத்துார் அருகே உள்ள அகிலி கிராமத்தைச் சேர்ந்த அமல்ராஜ், 42, என்பதும், அச்சிறுபாக்கம் அருகே உத்தமநல்லுார் சர்ச்சில், பாதிரியாராக இருந்ததும் தெரிய வந்தது.

அச்சிரும்பாக்கத்தில் இருந்து அதிக மதுபோதையில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னை நோக்கி காரில் புறப்பட்டதாக கூறப்படுகிறது.



போதை அதிகமானதால் நிதானம் தடுமாறிய நிலையில், கிளியாற்று பாலம் அருகே காலி இடத்தில் காரை நிறுத்தி விட்டு, கதவுகளை மூடிக் கொண்டு துாங்கியபோது, மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து, போலீசார் விசாரித்துவருகின்றனர்.

Advertisement