'ஆன்லைன் டிரேடிங்கில்' பல கோடி மோசடி; ம.பி., ஆசாமி கைது

3


கோவை: 'ஆன்லைன் டிரேடிங்' செய்வதாக கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்த, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவரை, கோவை போலீசார் கைது செய்தனர்.


கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவரின், 'வாட்ஸ் அப்' எண்ணுக்கு தொடர்பு கொண்ட நபர், 'ஆன்லைன் டிரேடிங்' செய்து அதிக லாபம் ஈட்டலாம் என குறுஞ்செய்தி அனுப்பினார். அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்ட போது, 'வாட்ஸ் அப்' குழுவில் இணைக்கப்பட்டார்.

அக்குழுவில், பங்குகளை வாங்குவது, விற்பது போன்ற தகவல்கள் அனுப்பப்பட்டன. குழுவில் இருந்த நபர்கள், தங்களின் 'டிரேடிங்' லாபங்களை குழுவில் பதிவிட்டு வந்தனர். இதைப்பார்த்த இளைஞர், உண்மை என நம்பி, அவர்கள் அளித்த வங்கி கணக்கு களுக்கு, 14.5 லட்சம் ரூபாயை அனுப்பினார்.


பின், முதலீட்டு பணம் மற்றும் லாபத்தை திருப்பி கேட்டபோது, அந்நபர்கள் மேலும் பணம் செலுத்தச் சொல்லியுள்ளனர்.



தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.


இளைஞர் பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை ஆய்வு செய்தபோது, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய பிரதேசம் சென்ற கோவை போலீசார், செல்போன் டவர் அடிப்படையில், மோசடியில் ஈடுபட்ட நபர் தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்தனர்.

மத்திய பிரதேசம், சாகர் மாவட்டத்தை சேர்ந்த சந்தீப் திவாரி, 34 என்பது தெரியவந்தது.


நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட இளைஞர்களை குறிவைத்து, ரூ.20
கோடிக்கும் மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

அவரை போலீசார் கைது செய்து, கோவை அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement