குழந்தை திருமணங்களால் கர்ப்பமாகும் சிறுமியர்

11

கெலமங்கலம்: குழந்தை திருமணங்களால் கர்ப்படையும் சிறுமியர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புகார் செய்யாமல் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதால், கடந்த, 3 மாதங்களில், 6 வழக்குகளுக்கு புகார் செய்யப்படவில்லை.


ஆந்திரா, கர்நாடகா என, இரு மாநில எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மலை கிராமங்கள் அதிகம். அதனால் கல்வியறிவில் பின்தங்கிய மக்கள் அதிகமாக உள்ளனர்.


வனத்தையொட்டிய மலை கிராமங்கள் மட்டுமின்றி, பல்வேறு குக்கிரமங்களில், 18 வயது பூர்த்தியாகும் முன்பே, திருமணம் செய்து வைக்கும் நடைமுறை அதிகமாக உள்ளது. படிக்கும் போதே இளைஞர்களின் ஆசைவார்த்தையை நம்பி, வீட்டிலிருந்து ஓடி, திருமணம் செய்து கொள்ளும் மாணவியரும் அதிகம்.



மாவட்டத்தில் கடந்த, 2018 ஏப்., முதல், 2019 மார்ச் வரை, 19 வயதிற்கு உட்பட்ட, 242 பேர் குழந்தை பெற்றுள்ளனர். 2019 - 20ல், 473 பேரும், 2020 - 21ல், 627 பேரும், 2021 - 22ல், 667 பேரும், 22 - 23ல், 345 பேரும், 23 - 24ம் ஆண்டில், 165 பேரும் என மொத்தம், 2,519 பேர் டீன் ஏஜில் கர்ப்பமடைந்துள்ளனர். இதில், 80 சதவீதத்திற்கும் மேல், குழந்தை திருமணம் செய்து கொண்டவர்கள்.


காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் அதிகபட்சமாக, 529 பேர் குழந்தை பெற்றுள்ளனர். கடந்த, 2020 - 21 மற்றும் 2021 - 2022ம் ஆண்டு என, கொரோனா காலக்கட்டத்தில் தான் அதிகபட்சமாக, 1,294 இளம் பருவ திருமணங்கள் நடந்து, சிறுமியர் கர்ப்பமடைந்துள்ளனர். குழந்தை திருமணம் தற்போது வரை, தொடர் கதையாக தான் உள்ளன.

கெலமங்கலம் ஒன்றியத்திற்குள் மொத்தம், 28 பஞ்.,க்கள் மற்றும் தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் என, 2 டவுன் பஞ்.,க்கள் உள்ளன. அங்கு கடந்த, 3 மாதங்களில் மட்டும், 18 வயது பூர்த்தியடையாத சிறுமியர், 5 பேர் கர்ப்பமாகி, ஓசூர் மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளனர்.

கர்ப்பமான சிறுமியர் விபரம்



ராயக்கோட்டை அருகே வசிக்கும் திருமணமான, 15 மற்றும் 14 வயது சிறுமியர், உள்ளுகுறுக்கை அருகே வசிக்கும், 13 வயது திருமணமான சிறுமி, பெட்டமுகிலாளம் அருகே வசிக்கும் திருமணமாகாத, 12 வயது சிறுமி, நாகமங்கலம் அருகே வசிக்கும் திருமணமாகாத, 15 வயது சிறுமி மற்றும் திருமணமான, 15 வயது சிறுமி என, 6 பேர், கடந்த, 3 மாதங்களில் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளுக்கு, அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.



சிறுமிகள் குறித்து மருத்துவமனையில் ஏ.ஆர்., என்டரி செய்து, சமூக நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. சிறுமியரின் கர்ப்பத்திற்கு காரணமான நபர்கள் மீது, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் ஸ்டேஷனில் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறையினர் அலட்சியம் காட்டுவதால், குழந்தை திருமணம் செய்வோர், போக்சோ வழக்குகளில் சிக்காமல் தப்பி வருகின்றனர்.

குறிப்பாக, ராயக்கோட்டை அருகே, குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டுள்ள, 14 வயது சிறுமி, 2வது குழந்தைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இப்படி அதிகாரிகள் அலட்சியத்தால் குழந்தை திருமணங்கள் தொடர் கதையாகுகின்றன.



மேலும், சிறு வயதில் கல்வி கற்க முடியாமல், ஒரு குழந்தைக்கு தாயாகி வருவதால், அவரது மனம் மற்றும் உடல்நிலை பாதிக்கிறது. ஒரு சிறுமி கர்ப்பமடைவது வெளியே தெரிந்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு நிதியுதவியில் சிக்கல்



சிறுமியர் கர்ப்பமடையும் சம்பவத்தில், போக்சோ வழக்கு பதிந்து, போலீசார் நடவடிக்கை எடுத்தால், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் நிதியுதவி கிடைக்கும். ஆனால் வழக்குப்பதிய சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், பாதிக்கப்படும் சிறுமியருக்கு, அரசு நிதியுதவி கிடைப்பதில்லை.

Advertisement