தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்

புதுடில்லி: மஹாராஷ்டிராவைத் தொடர்ந்து, பீஹாரிலும் பா.ஜ., 'மேட்ச் பிக்சிங்' செய்ய உள்ளதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றம்சாட்டி உள்ளார். இதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்து உள்ளது.
ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேர்தலை திருடுவது எப்படி?
ஜனநாயகத்தில் முறைகேடு செய்வதற்கான வரைபடமாக மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் அமைந்துள்ளது. நான் எழுதிய கட்டுரை ஒன்றில் இது விவரிக்கப்பட்டு உள்ளது.
முதலில்,
1.தேர்தல் கமிஷன் நியமனத்துக்கான குழுவை ஒழுங்குபடுத்துதல்
2.போலியான வாக்காளர்களை பட்டியலில் இணைத்தல்
3.ஓட்டு எண்ணிக்கையை அதிகரித்தல்
4.எங்கு எல்லாம் பா.ஜ., வெற்றி பெற வேண்டுமோ அங்கு எல்லாம் போலி ஓட்டுகள் பதிவு
செய்தல்
5. ஆதாரங்களை மறைத்தல்.
மஹாராஷ்டிராவில் பா.ஜ., ஏன் இவ்வளவு தீவிரமாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்வது கடினம் அல்ல. ஆனால், மோசடி என்பது மேட்ச் பிக்சிங்கை போன்றது. ஏமாற்றுபவர்கள் விளையாட்டை வெல்லக்கூடும். ஆனால், அமைப்புகளை சேதபடுத்துவதுடன், முடிவுகளின் மீதான பொது மக்களின் நம்பிக்கையை அழிக்கும். அனைத்து இந்தியர்களும் ஆதாரங்களை பார்க்க வேண்டும். தாங்களாக முடிவு செய்வதுடன், விடையை கேட்க வேண்டும்.
ஏனெனில், மஹாராஷ்டிராவில் நடந்த 'மேட்ச் பிக்சிங்' அடுத்த பீஹாரிலும், பா.ஜ., தோற்கும் இடங்களிலும் நடக்கும். தேர்தலில் 'மேட்ச்- பிக்சிங்' என்பது ஜனநாயகத்துக்கான விஷம் ஆகும். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.,வின் துஹின் சின்ஹா கூறுகையில், நாட்டின் அமைப்புகளை அரக்கத்தனமாக சித்தரிக்கும் மோசமான செயலில் ராகுல் மீண்டும் ஈடுபட்டு உள்ளார். இந்த பிரச்னைகள் குறித்து தேர்தல் ஆணையம் தொடர்ந்து தெளிவாக விளக்கம் அளித்து உள்ளது. இவ்வாறு அந்தப் பதிவில் அவர் தெரிவித்து உள்ளார்.









