போலி ஆப் மூலம் லிங் அனுப்பி ரூ.54 லட்சம் மோசடி: அசாம் வாலிபர் கைது

புதுச்சேரி : போலி ஆப் மூலம் லிங் அனுப்பி, 54 லட்சம் ரூபாய் மோசடி செய்த அசாம் வாலிபரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ராஜகுமாரன். இவர் பேஸ்புக்கில் டிரேடிங் விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில், இருந்த எஸ்.பி.ஐ., கேப் செக்யூரிட்டி எக்சேஞ்ச் குரூப் என்ற நிறுவனத்தின் லிங்கை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் குரூப்பில் சேர்ந்துள்ளார்.


அந்த குரூப்பில் இருந்து மஞ்சு பட்சிசா என்ற நிறுவன நபர் வாட்ஸ் ஆப் கால் மூலம் தொடர்பு கொண்டு டெலிகிராம் மூலம் டிரேடிங் விவரங்களை கூறி, 83 சதவீதம் லாபம் தருகிறோம் என, பேசினார். தொடர்ந்து, அந்த நபர், எஸ்.பி.ஐ., 2024 என்ற போலி ஆப் லிங்க்கை அனுப்பி பதிவிறக்கம் செய்யுமாறு கூறினார்.



அந்த லிங் மூலம், ராஜகுமாரன் தனது வங்கி கணக்கிலிருந்து, 54 லட்சம் ரூபாயை அனுப்பி முதலீடு செய்தார். அதற்கான லாப தொகை 96 லட்சம் ரூபாய் வந்ததாக, மொபைலில் காட்டியது. ஆனால் வங்கி கணக்கில் பணம் இல்லை. அதன்பிறகே மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். மோசடி கும்பலை பிடிக்க, எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் கொண்டு குழு அமைக்கப்பட்டு, குற்றவாளியை தேடி வந்தனர்.


இந்நிலையில், சைபர் டூல்ஸ் தொழில்நுட்பம் மூலம், அசாம் மாநிலத்தில், போலி ஆப் மூலம், வங்கி கணக்கில் பணம் சென்றது தெரியவந்தது. இது சம்மந்தமாக அசாம் மாநில வாலிபரை கைது செய்து, புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.



அவர், மோரிகான் பகுதியை சேர்ந்த அஜிபுர் ரகுமான், 28, என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 2 லட்சம் ரொக்கம், 2 லேப்டாப், 2 இன்டனர்நெட் மோடம், 4 மொபைல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில், ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

மேலும் வழக்கில் தொடர்புடைய அவரது சகோதரர், தந்தை ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தெரியாத நம்பர்களிலிருந்து ஆன்லைன் வர்த்தகத்தைப் பற்றி வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என, சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா தெரிவித்தார்.

Advertisement