கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடனுக்கு 'சிபில் ஸ்கோர்'

மதுரை: கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 'சிபில் ஸ்கோர்' கணக்கிட்ட பின்பே கடன் வழங்க வேண்டும் என வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை முதல்வர் ஸ்டாலின் உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய வங்கிகள், சில தனியார் வங்கிகளின் வாடிக்கையாளர்களின் கடன் செலுத்தும் திறனுக்கேற்ப மதிப்பீடு (சிபில் ஸ்கோர்) வழங்கப்படும். கடனை முறையாக திருப்பி செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் போட்டி போட்டு கடன் வழங்குகின்றன. இதுவரை கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இந்த முறை பயன்படுத்தவில்லை. ஏனென்றால் கூட்டுறவு கடன் சங்கங்கள் விவசாயிகள் மற்றும் அந்தந்த துறைசார்ந்த உறுப்பினர்களின் பங்களிப்பில் உருவாக்கப்பட்டு செயல்படுகிறது.

இந்நிலையில் மே 26ல் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கடன் அட்டை மூலம் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகை கடன்களை விவசாயிகளின் 'சிபில் ஸ்கோர்' அறிக்கை பார்த்தே வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதை நாங்கள் ஏற்கமுடியாது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பி.ஆர். பாண்டியன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தெரிவித்தனர்.

ஏற்க முடியாது



அவர்கள் கூறியதாவது: வேளாண் பயிர்க்கடனுக்கு மட்டுமல்லாமல் கறவை மாட்டு பராமரிப்பு கடன், உழவு இயந்திரங்கள் என ரூ.ஒரு லட்சத்திற்கு மேல் வாங்கினால் நபார்டு வங்கி வழிகாட்டுதல் படி 'சிபில் ஸ்கோர்' பார்த்து கடன் வழங்குவது சாத்தியமே இல்லை. வேளாண் சார்ந்த தொழில்களுக்கு 'சிபில் ஸ்கோர்' பார்க்க வேண்டுமென்றால் எந்த விவசாயியுமே கடன் பெற தகுதியில்லாதவர் என்று தான் கூற வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வந்த தங்க நகைக்கடன் மீதான கட்டுப்பாடுகள் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பொருந்தாது என சமீபத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருந்த நிலையில் இந்த 'சிபில் ஸ்கோர்' நடைமுறையை கொண்டு வந்ததை ஏற்க முடியாது.

இது மத்திய அரசு அல்லது ரிசர்வ் வங்கியின் உத்தரவு என்று சொல்லி கூட்டுறவுத் துறை தப்பிக்கவும் முடியாது.

விவசாயிகள் நகைக்கடன் பெறுவதற்கு விதித்த நிபந்தனைகளை ரத்து செய்யுமாறு முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் மத்திய அரசு செய்த அதே செயலை மாநில அரசின் கூட்டுறவுத் துறை செய்வது வேதனை அளிக்கிறது. தமிழக அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

Advertisement