பொது இடங்களில் சிலைகள் நிறுவ அனுமதி வழங்கக்கூடாது; உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை மீறி பொது இடங்களில் சிலைகள் அமைக்க எதிர்காலத்தில் அனுமதி வழங்காமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் நம்பிபத்து பால்சாமி தாக்கல் செய்த மனு:மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை மற்றும் பெயர் பலகை வடக்கு வள்ளியூர் மெயின் ரோடு வள்ளியூர் காய்கறி சந்தை பொது நுழைவுவாயில் அருகில் நிறுவப்பட உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: சந்தை அருகே சிலையை நிறுவ வேண்டாம் என கலெக்டருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிலை அமைப்பது தொடர்பான குறிப்பிட்ட அரசாணை திரும்பப் பெறப்படும். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: பொது சாலைகள், நடைபாதைகள், பிற பொது பயன்பாட்டுக்குரிய இடங்களில் இனி எந்த சிலையையும் நிறுவ அல்லது எந்தவொரு கட்டமைப்பையும் ஏற்படுத்த அனுமதிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற அமர்வு 2021 ல்,'அனைத்து பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், பொது சாலைகள், அரசு நிலம், மேய்க்கால் புறம்போக்கு நிலத்திலுள்ள சிலைகள் மற்றும் கட்டமைப்புகளை தமிழக அரசு தரப்பு அடையாளம் காண வேண்டும். ஆக்கிரமிப்புகள் அல்லது அனுமதியற்ற சட்டவிரோத கட்டமைப்புகள், சிலைகளை சட்டம், விதிகளை பின்பற்றி அகற்ற வேண்டும். நெடுஞ்சாலைகள், பொது இடங்கள், அரசு புறம்போக்கு அல்லது மேய்க்கால் புறம்போக்கில் மக்களின் உரிமைகளை பாதிக்கும் எந்தவொரு கட்டமைப்பு அல்லது சிலைகளை அமைப்பதற்கு இனிமேல் அனுமதி வழங்கக்கூடாது. சிலைகள் அல்லது கட்டமைப்புகளை அமைக்க அனுமதி வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். மாநிலம் முழுவதும் 'தலைவர்கள் பூங்கா' உருவாக்க வேண்டும். அங்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட சிலைகள், கட்டமைப்புகளை இடமாற்றம் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டது. 'தலைவர்கள் பூங்கா,' உருவாக்குவது இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில்
அவர்கள் அத்தலைவர்களின் கருத்துக்கள், சித்தாந்தங்களை அறிந்து கொள்ள முடியும். 'தலைவர்கள் பூங்கா'அமைப்பதற்கான உறுதியான முயற்சிகளை மேற்கொள்வதற்கு பதிலாக, பொது இடங்களில் சிலைகளை நிறுவ அனுமதி வழங்கும் உத்தரவுகளை அரசு பிறப்பிக்க இயலாது. பொது இடங்களில் சிலைகளை அமைக்க அனுமதி வழங்குவதால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பிற காரணங்களால் மக்கள் சிரமப்படுகின்றனர். பொது இடங்களில் சிலைகளை நிறுவ அனுமதி வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கும்போது, மாநில அரசு அத்தகைய அனுமதியை வழங்கும் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது.உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை மீறி அத்தகைய அனுமதி எதிர்காலத்தில் வழங்கப்படாமல் இருப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. அரசாணையை திரும்பப் பெறுவதை நிறைவேற்றியது தொடர்பாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய விசாரணை ஜூன் 16 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.



மேலும்
-
இந்தியாவில் தீவிர வறுமை குறைந்தது: உலக வங்கி அறிக்கை
-
தனியார் மயமாக்கல்: காங்., தலைவர் குற்றச்சாட்டை நிராகரித்தார் சுற்றுச்சூழல் அமைச்சர்
-
அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு; பின்வாங்கிய எலான் மஸ்க்
-
இனி 10 மணி நேரம் வேலை: ஆந்திர அரசு முடிவு
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது