கோகோ காப் புதிய சாம்பியன்: பிரெஞ்ச் ஓபனில் அசத்தல்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் புதிய சாம்பியன் ஆனார். பரபரப்பான பைனலில், பெலாரசின் சபலென்காவை வீழ்த்தினார்.

பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, 'நம்பர்-2' அமெரிக்காவின் கோகோ காப் மோதினர். 'டை பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை சபலென்கா 7-6 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட கோகோ காப், 2வது செட்டை 6-2 என மிகச் சுலபமாக தன்வசப்படுத்தினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய அமெரிக்க வீராங்கனை 6-4 என வென்றார்.

இரண்டு மணி நேரம், 38 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய கோகோ காப் 6-7, 6-2, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பிரெஞ்ச் ஓபனில் முதன்முறையாக கோப்பை வென்றார். தவிர இது, கிராண்ட்ஸ்லாம் ஒற்றையரில் கோகோ காப் கைப்பற்றிய 2வது பட்டம். ஏற்கனவே 2023ல் யு.எஸ்., ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.


ரூ.25 கோடி பரிசுபெண்கள் ஒற்றையர் பைனலில் வென்ற கோகோ காப், சாம்பியன் கோப்பையுடன் ரூ. 25 கோடி பரிசு வென்றார். பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்த சபலென்காவுக்கு ரூ. 12.5 கோடி பரிசு கிடைத்தது.



சின்னர்-அல்காரஸ் மோதல்


ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் ஜானிக் சின்னர் மோதினர். இதில் ஏமாற்றிய ஜோகோவிச் 4-6, 5-7, 6-7 என தோல்வியடைந்தார். இன்று நடக்கும் பைனலில், உலகின் 'நம்பர்-1' ஜானிக் சின்னர், 'நடப்பு சாம்பியன்' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் ('நம்பர்-2') மோதுகின்றனர்.

Advertisement