பிரதமரின் பக்ரீத் வாழ்த்தை கேலி செய்த தமிழக அமைச்சர்

12

சென்னை நாடு முழுதும் உள்ள இஸ்லாமியர்கள் நேற்று, பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர். அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு, 'மோடியின் செயல்கள் அனைத்தும் அரசியலமைப்பு சட்டத்தை காறி உமிழ்வதை போல உள்ளது' என, பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம் செய்திருப்பது, சர்ச்சையாகி உள்ளது.

அவரது அறிக்கை:



மோடியின் பக்ரீத் வாழ்த்து, போலி வேஷம். மத அடிப்படையில், மோடி இரட்டை வேடமிடுவது உலகறிந்த உண்மை. நடிகர் வடிவேலு பாணியில், 'ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்ன மரத்துல ஒரு குத்து' என்பது போல, 'காந்திக்கு ஒரு மாலை, கோட்சேக்கு ஒரு மாலை' அணிவிப்பதில் கூச்சமே இல்லாத வித்தைக்காரர்.



காலையில் கண்ணகி வேடம், மாலையில் தில்லுமுல்லு. இதே பாணியில் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து சொல்லியிருக்கும் பிரதமர் மோடி, இதுவரை தான் பங்கேற்ற 173 பிரசார மேடைகளில், 110ல் இஸ்லாமியர்களை தாக்கி பேசியுள்ளார். கடந்த தேர்தல் நேரத்தில் ராஜஸ்தானில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் மோடி, இஸ்லாமியர்களை ஊடுருவல்காரர்கள் என்றும், அவர்கள் அதிக குழந்தைகள் பெற்றுள்ளனர் என்றும் வசைபாடினார்.


அதேபோன்று, காங்கிரஸ் கட்சி, ஹிந்துக்களின் சொத்துக்களை இஸ்லாமியர்களுக்கு பிரித்து தர திட்டமிட்டுள்ளதாக மோடி பொய் பேசினார். இப்படி வக்கிரத்தின் உச்சத்தில் பேசிவிட்டு, வாழ்த்தும் சொல்வது தான் பா.ஜ., கூறும் சனாதனமா?



அரசியலமைப்பு சட்டத்தின் மீது ஆணையிட்டு பதவியேற்ற மோடி, அரசியலமைப்பு சட்டம்
தான் தனது வேதம் என்றார்.


ஆனால், அவரது செயல்கள் அனைத்தும் அரசியலமைப்பு சட்டத்தை காறி உமிழ்வதை போல் உள்ளது. இப்பேர்பட்டவர்களுக்கு ஜால்ரா போட கால்கட்டு போட்டிருக்கிறது அ.தி.மு.க., இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement