பங்காளி சண்டையை பிறகு பார்ப்போம்: தினகரன்

மதுரை : அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அளித்த பேட்டி:
முதல்வர் ஸ்டாலின் மதுரை வந்ததால், அவர்களது வண்டவாளம் தான் தண்டவாளம் ஏறியது. சாக்கடை கால்வாயை துணி வைத்து மறைத்தது தான் மிச்சம்.
முதல்வரை வரவேற்க பிரியாணி கொடுத்து, லாரிகளில் ஆட்களை ஏற்றி வந்துள்ளனர். தமிழகத்திற்கு எதிராக பா.ஜ., அரசு செயல்படுகிறது என தி.மு.க., பொய் பிரசாரம் செய்து வருகிறது; இனி அது எடுபடாது.
வரும் 2026ல் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி. தி.மு.க., படுதோல்வி அடையும். 'எத்தனை முறை அமித் ஷா தமிழகம் வந்தாலும் ஆட்சிக்கு வர முடியாது' என, முதல்வர் ஸ்டாலின் கூறுவது பயத்தின் வெளிப்பாடு.
மதுரை வரும் அமித் ஷாவை சந்திக்க, நான் நேரம் கேட்கவில்லை. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு பா.ஜ., முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அவர் பா.ஜ., கூட்டணியில் இருப்பதை, அதன் தலைவர் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.
பா.ஜ., கூட்டணியில் அ.ம.மு.க., ஏற்கனவே உள்ளது. இதில் இப்போது அ.தி.மு.க.,வும் இணைந்துள்ளது. அந்த வகையில் கூட்டணியில் நாங்கள்தான் சீனியர்.
ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டால் தான், தி.மு.க.,வை வீழ்த்த முடியும். பொது எதிரியான தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, பங்காளி சண்டையை ஓரமாக வைத்துவிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து செயல்படுகிறோம்.
அதுபோல, தி.மு.க., ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நினைக்கும் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். தி.மு.க., கூட்டணியில் பல கட்சிகள் இருந்தாலும், அரசுக்கு மக்களிடம் அதிருப்தி இருப்பதால், அவர்கள் தோற்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.