மல்யுத்த நட்சத்திரங்கள் 'சஸ்பெண்ட்' * வயது மோசடி அம்பலம்

புதுடில்லி: வயது மோசடியில் ஈடுபட்ட இந்தியாவின் 30 மல்யுத்த நட்சத்திரங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஹரியானாவை சேர்ந்த பல மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டில்லியில் பிறந்தவர்கள் என்றும், ஜூனியர் போட்டியில் பங்கேற்க போலியான சான்றிதழ்கள் வழங்கி உள்ளதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு (டபிள்யு.எப்.ஐ.,) புகார் வந்தன. சமீபத்தில் பீஹாரில் நடந்த கேலோ இந்தியா போட்டியில் வயது மோசடி செய்ய மல்யுத்த நட்சத்திரங்கள் இருவர் பதக்கம் வென்றனர்.
இதுகுறித்து விசாரித்த டபிள்யு.எப்.ஐ., அமைப்பு வெளியிட்ட செய்தி:
வயது மோசடி குறித்து 436 புகார் வந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடக்கிறது. ஹரியானாவில் இருந்து தேர்வு பெறுவது கடினம் என்பதால், பெரும்பாலும் டில்லியில் பிறந்ததாக சான்றிதழ் 'ரெடி' செய்துள்ளனர். நிறுவனங்களிடம் விசாரித்த போது, அனைத்தும் போலி எனத் தெரிந்தது.
இதனால், 30 மல்யுத்த வீரர், வீராங்கனைகளை சஸ்பெண்ட் செய்துள்ளோம். அவர்களது வாழ்க்கையை வீணாக்க விரும்பவில்லை. ஜூனியர் போட்டிகளில் பங்கேற்க மட்டுமே தடை செய்துள்ளோம்.
தங்களது மோசடி செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். தங்கள் வயதுக்கு ஏற்ப, சீனியர் பிரிவில், அவர்களது சொந்த மாநிலத்தில் இருந்து களமிறங்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.