ரெப்போ வட்டி சதவீதம் குறைப்பு வரவேற்கும் தொழில் வர்த்தக சங்கம்

மதுரை : ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தை ஆறில் இருந்து 5.5 சதவீதமாக குறைத்ததற்கும் ரொக்க இருப்பு விகிதத்தை ஒரு சதவீதம் குறைத்துள்ள நடவடிக்கையை மதுரை அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத்தினர் வரவேற்றனர்.

தலைவர் ரத்தினவேலு கூறியதாவது:

இந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தை அரை சதவீதத்திற்கும் ரொக்க இருப்பு விகிதத்தை ஒரு சதவீதம் குறைத்துள்ளது பாராட்டுக்குரியது.

இதனால் நாட்டின் நிதியோட்டம் அதிகரித்து வங்கிகளின் கடன் வழங்கும் திறனையும் மேம்படுத்தும். இந்த மாற்றம் பணவீக்கத்தை கையாள்வதிலும் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் சமநிலையை கடைபிடிக்கும்.

ரொக்க இருப்பு குறைப்பால் ரூ.2.5 லட்சம் கோடி அளவிற்கு கூடுதல் நிதி வங்கிகளில் கிடைக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ரெப்போ விகிதம் குறைந்துள்ளதால் வங்கிகள் குறைந்த வட்டியில் ரிசர்வ் வங்கியில் இருந்து கடன் பெற முடியும்.

இதன் மூலம் வீட்டுக்கடன், வாகனம், வணிகம், வேளாண்மை, குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான வட்டி விகிதங்களை குறைப்பதற்கும் வாய்ப்புள்ளது.

இந்த இரட்டை நடவடிக்கைகளின் பலன்கள் தொழில் வணிகத் துறையினரை சென்றடைய வேண்டுமெனில் வங்கிகள் இவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

Advertisement