போலீஸ் ஸ்டேஷன்- கிணறு ஆக்கிரமிப்பு அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : கரூர் மாவட்டம் சத்தியமங்கலத்தில் 'போலீஸ் ஸ்டேஷன் கிணறு' என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தெலுங்கபட்டி ஜானகிராம் தாக்கல் செய்த மனு:
குளித்தலை அருகே சத்தியமங்கலத்தில் குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்துஉள்ளனர். வருவாய்த்துறை ஆவணங்களில் அது போலீஸ் ஸ்டேஷன்-கிணறு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
அங்கு புதிதாக போலீஸ் ஸ்டேஷன் அல்லது 'அவுட்போஸ்ட்' அமைக்க வேண்டும் என கலெக்டர், எஸ்.பி., குளித்தலை தாசில்தார், இன்ஸ்பெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: இம்மனுவில் கோரப்பட்டுள்ள நிவாரணம் தொடர்பாக, குளித்தலை தாசில்தார் உயர்நீதிமன்றக் கிளை பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், சம்பந்தப்பட்ட நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தாசில்தார் அறிக்கை அடிப்படையில் தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டப்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். சட்ட நடைமுறைகளை பின்பற்றி ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பை குளித்தலை போலீசார் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.