சுப்மன்...சுப ஆரம்பம்: இந்திய 'பேட்டிங்' வரிசை எப்படி

புதுடில்லி: ''டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் சுப்மன் கில், நான்காவது இடத்தில் களமிறங்கலாம்,''என பாண்டிங் தெரிவித்தார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஜூன் 20--ஆக.4) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், லீட்சில் வரும் 20ல் துவங்குகிறது. அனுபவ ரோகித், கோலி, அஷ்வின் ஓய்வு பெற்ற நிலையில், இந்திய அணி மாற்றத்தை நோக்கி நகர்கிறது. இளம் கேப்டன் சுப்மன் கில் 25, அணிக்கு சுப ஆரம்பம் தர உள்ளார்.
இத்தொடருக்கான பேட்டிங் வரிசையில் சுப்மன் கில் இடம் பற்றி குழப்பம் நிலவுகிறது. 32 டெஸ்டில் 5 சதம் உட்பட 1,893 ரன் (சராசரி 35.05) எடுத்துள்ளார். துவக்க வீரராக 28 ரன் (4 இன்னிங்ஸ்), 2வது இடத்தில் 846 ரன் (25 இன்னிங்ஸ்), 3வது இடத்தில் அதிகபட்சமாக 1019 ரன் (30 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் துவக்க வீரராக 3 டெஸ்டில் (2021-23), 88 ரன் மட்டுமே எடுத்துள்ளார். இதனால், இம்முறை இடம் மாற வேண்டியிருக்கும்.
டெஸ்டில் சச்சின், கோலி போன்றோர் நான்காவது இடத்தில் தான் சாதித்தனர். ஆனால், சுப்மன் இதுவரை நான்காவது இடத்தில் விளையாடியதே இல்லை. இங்கிலாந்து தொடரில் முதல் முறையாக நான்காவது இடத்தில் வரலாம்.
இது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங் கூறியது: 'ஒயிட் பால்' கிரிக்கெட்டில் சுப்மன் அசத்துகிறார். ஆனால், டெஸ்டில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. இளம் கேப்டன் என்ற சுமையுடன், டெஸ்டில் துவக்க வீரராக களமிறங்குவது கடினமானது.
துவக்கத்தில் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் வர வேண்டும். ஆட்ட நுணுக்கத்தில் கைதேர்ந்த சுதர்சன், டெஸ்ட் அரங்கிலும் முத்திரை பதிப்பார். துவக்கத்தில் இரு இளம் பேட்டர்கள் களமிறங்குவதால், மூன்றாவது இடத்தில் அனுபவ கே.எல்.ராகுல் அல்லது கருண் நாயர் வரலாம். நான்காவது இடத்தில் சுப்மன் வருவதே சிறந்தது. இது, கேப்டனாக அணியை எளிதாக வழிநடத்த உதவும். ஜெய்ஸ்வால், சுதர்சன், கே.எல்.ராகுல், சுப்மன், கருண் நாயர் என 'டாப்-5' பேட்டர்கள் வரலாம்.
சரியான முடிவு: பும்ரா அடிக்கடி காயம் அடையும் நிலையில், டெஸ்ட் கேப்டன் பொறுப்பை சுப்மன் கில் வசம் கொடுத்தது நல்ல முடிவு. இவருக்கு நீண்ட கால அடிப்படையில் கேப்டன் பதவியை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சீனியர் வீரர்களின் இடத்தை நிரப்புவது கடினம். ஆனால், இந்தியாவில் ஜெய்ஸ்வால் போன்ற திறமையான இளம் வீரர்கள் இருப்பதால் பிரச்னை இல்லை. கே.எல்.ராகுல், பும்ரா என அனுபவ வீரர்களும் உள்ளனர். விளையாடும் 'லெவனில்' இளம் 'வேகப்புயல்' அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இங்கிலாந்து சூழலுக்கு ஏற்ப இவரால் பந்துகளை நன்கு 'ஸ்விங்' செய்ய முடியும்.
இவ்வாறு பாண்டிங் கூறினார்.
அணியின் நலன் முக்கியம்
இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில்,''கோலியின் ரன் தாகம், தலைமைபண்பை சுப்மன் கில் பின்பற்றலாம். அவரது பேட்டிங் இடத்தில் களமிறங்க வேண்டிய அவசியமில்லை. எந்த இடத்தில் வர வேண்டும் என்பது சுப்மனின் தனிப்பட்ட முடிவு. தன்னால் சிறப்பாக செயல்படக் கூடிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும். அணியின் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்,''என்றார்.