போலியாக அடகு கடை நடத்தி ரூ.3.17 கோடி ஏமாற்றியவர் கைது 

அரியலுார்:அரியலுார் அருகே போலியாக நகை அடகு கடை நடத்தி, 53 பேரிடம் 3.17 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை ஏமாற்றிய நபரை, அரியலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரியலுார் மாவட்டம், நமங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரா, 47, என்பவர், 9 சவரன் தங்க நகைகளை வெவ்வேறு தேதிகளில், ராமு என்ற நபரின் கடையில் அடமானம் வைத்தார். நகையை மீட்க சென்றபோது கடை மூடப்பட்டு இருந்தது.

விசாரித்ததில், அந்த நபர், பலரிடம் நகைகளை அடகு பிடித்து, மோசடி செய்து தலைமறைவாக இருப்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த இந்திரா, அரியலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். தலைமறைவாக இருந்த ராமுவை, போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்ததில், அரசு அனுமதி பெறாமல் போலியாக நகை அடகு கடை நடத்தியதும், இதுபோல பல நபர்களை நம்ப வைத்து நகைகளை மோசடி செய்ததும் தெரிந்தது.

அவர் இதுவரை 53 பேரிடம், 3.17 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை அடகுக்கு வாங்கி ஏமாற்றியதும் தெரிந்தது. அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement