சட்ட நுழைவு தேர்வில் பழங்குடியின மாணவன் சாதனை

திருச்சி:துறையூர் அருகே, தேனுார் மலை கிராமத்தை சேர்ந்த பரத் என்ற மாணவர், 'கிளாட்' எனப்படும் பொது சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, பச்சமலையில் உள்ள தேனுார் மலை கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் - சுதா தம்பதியின் மூத்த மகன் பரத், 17. பத்து ஆண்டுகளுக்கு முன் தாயை இழந்து, தந்தையின் பராமரிப்பில் வளர்ந்த பரத், சின்ன இலுப்பூரில் உள்ள அரசு பழங்குடியின மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்தார்.

பொது சட்ட நுழைவுத் தேர்வு எழுதி, இந்திய அளவில் 964 மதிப்பெண் பெற்று, தமிழகத்தில் இந்த தேர்வு எழுதியவர்களில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மாணவர் பரத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், 'தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பெற தகுதி பெறும் முதல் பழங்குடியின மாணவர் என்ற சாதனையை பரத் படைத்துள்ளார். இதனை அறியும்போது, உள்ளபடியே உள்ளம் உவகையில் நிறைகிறது.

'பரத், சட்டம் பயின்று, தன் அறிவொளியை இந்த சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அவரது சட்டப் படிப்புக்கு தி.மு.க., சட்டத்துறையும், அதன் செயலர் இளங்கோவும் துணைநின்று, அவரை வழிநடத்துவர்' என தெரிவித்துள்ளார்.

Advertisement