மல்லியங்கரணை சாலையோரம் கொட்டப்படும் கோழிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் -- புக்கத்துறை நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, மல்லியங்கரணை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், உத்திரமேரூர் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அருகே, சாலையோரங்களில் கோழி இறைச்சி கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், மூட்டைகளாக கட்டி கொட்டப்பட்டு வருகின்றன. மூட்டையில் இருந்து சிதறிய கோழிக்கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், கழிவுகளில் இருந்து தொற்றுநோய் பரப்பும் கிருமிகள் உற்பத்தியாகி, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
தொடர்ந்து, வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும் இச்சாலையோரங்களில், கோழிக்கழிவுகள் மூட்டை கட்டி கொட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
கோழிக்கழிவுகள் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவோரின் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பேரூராட்சி நிர்வாகத்தினர் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
எனவே, சாலையோரங்களில் கோழிக்கழிவுகள் கொட்டுவோர் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.