பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை கட்டித்தழுவி வாழ்த்து பரிமாற்றம்


சேலம், பக்ரீத் பண்டிகையையொட்டி, சேலம் ரயில்வே ஸ்டேஷன் அருகே ஜாகீர் அம்மாபாளையம் நுாருல் இஸ்லாம் ஜமாத் ஈத்கா மைதானத்தில் நேற்று காலை, 8:00 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. ஏராளமான இஸ்லாமியர் பங்கேற்றனர்.

பின் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். ஆடு, மாடுகளை வெட்டி, இறைச்சியை ஏழைகளுக்கு குர்பானியாக கொடுத்தனர்.



அதேபோல் சேலம் ஜாமியா மஸ்ஜித், கோட்டை பள்ளிவாசல், முகமது புறா பள்ளிவாசல் உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல்களில், இஸ்லாமியர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ஆத்துாரில் திரண்ட இஸ்லாமியர், ஊர்வலமாக புதுப்பேட்டை சென்று, ஈத்கா மைதானத்தை அடைந்தனர். அங்கு பள்ளிவாசல் நிர்வாகிகள் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. பல்வேறு பள்ளிவாசல் இமாம்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். நரசிங்கபுரம், தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனுார், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளிலும், பக்ரீத் சிறப்பு தொழுகைகள் நடந்தன. ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர், மலை அடிவாரத்தில் இருந்து தேர்வீதி வழியே ஊர்வலமாக சென்று பால்வாய் ஈத்கா மைதானத்தில், அரசு காஜி காரி முஹம்மத் உவைஸ் தலைமையில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
அதேபோல் இடைப்பாடியில் உள்ள இஸ்லாமியரும், தொழுகையில் ஈடுபட்டனர்.

Advertisement