குடோனில் ரூ.27 லட்சத்தில் சிகரெட் பண்டல் திருட்டு
சேலம், சேலம், அரிசிபாளையம், தம்மண்ணன் தெருவை சேர்ந்தவர் சிவபாலன், 58. சிகரெட், சாக்லெட் உள்ளிட்ட பொருட்களை மொத்த வியாபாரம் செய்கிறார். அதற்கான குடோன், அதே பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு குடோனை பூட்டிச்சென்றார். நேற்று காலை, 8:00 மணிக்கு வந்தபோது, குடோனின் பக்கவாட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறி கிடந்த நிலையில், 18 பண்டல்கள் கொண்ட விலை உயர்ந்த சிகரெட் திருடுபோனது தெரிந்தது. அதன் மதிப்பு, 27.69 லட்சம். மேலும் குடோனில் இருந்த லாக்கரை உடைக்க முயன்றும், திருட்டு கும்பலால் முடியவில்லை. அதனால், 13 லட்சம் ரூபாய்
தப்பியுள்ளது. இதுகுறித்து சிவபாலன் புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். தடயவியல் நிபுணர்கள், ஆதாரங்களை சேகரித்தனர். 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வுக்கு உட்படுத்தியதில், நள்ளிரவில் காரில் வந்த இருவர், பூட்டை உடைத்து திருடியது தெரிந்தது. அதன் அடிப்படையில் விசாரணை தொடர்கிறது.